இப்போதாவது திருமாவளவன் பிரச்சாரம் செய்வாராா.. திமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு!
திமுகவுக்காக திருமாவளவன் பிரச்சாரம் செய்ய வருவாரா என தெரியவில்லை.
சென்னை: திமுகவுக்காக 4 தொகுதி இடைத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஈடுபடுவாரா.. இது என்ன கேள்வி... என்ற கேள்வி எழலாம். ஆனால் விஷயம் இருக்கிறது.
ஆட்சியை பிடிக்க திமுக நிறைய மெனக்கெட்டு வருகிறது. சட்டரீதியாக பாதி, மறைமுகமாக மீதி என வேலைகளில் இறங்கி வருகிறது. 4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகதான் படு சுறுசுறுப்பாக இருக்கிறது.
ஓட்டப்பிடார திண்ணை பிரச்சாரத்தில் அது நன்றாகவே தெரிகிறது! ஆனால் திருமாவளவன் பிரச்சாரத்துக்கு வருவாரா? மாட்டாரா என்ற பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது!
எடப்பாடி பழனிச்சாமியின் அராஜக ஆட்சிக்கு மே 19-ஆம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள்- ஸ்டாலின்
4 நாட்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு உதவியாக காங்கிரஸ் சார்பில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளார்கள். அதேபோல, மதிமுக சார்பில் வைகோ 4 நாட்கள் பிரசாரம் செய்ய போவதாக சொல்லிவிட்டார். அதேபோல, இடதுசாரி தலைவர்களும் பிரசாரம் செய்ய போகிறார்கள்.
காரணங்கள்
ஆக கூட்டணி கட்சியினர் எல்லாருமே பிரச்சாரத்துக்கு களம் இறங்க உள்ள நிலையில், திருமாவளவன் மட்டும் இன்னும் எதுவுமே சொல்லவில்லை. இதுதான் நாம் மேற்சொன்ன பாராவில் எழுப்பிய கேள்விக்கு காரணம். இந்த கேள்வி எழ காரணம் இல்லாமல் இல்லை.
ரவிக்குமார்
லோக்சபா தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. ஒன்று சிதம்பரம், இன்னொன்று விழுப்புரம். இதில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிட்டுள்ளார். திருமா, சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் களம் கண்டார்.
பாமக வக்கீல் பாலு
தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகின. சிதம்பரம் தவிர வேறு எங்கேயும் திருமாவளவன் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பது அதில் ஒன்றாக கூறப்பட்டது. இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், யாரும் மறுக்கவும் இல்லை. இதைத்தான் பாமக வக்கீல் பாலுவும் செய்தியாளர்களிடம் சொல்லி இருந்தார்.
இடைத்தேர்தல்
அதற்கேற்ப திருமாவளவன் சிதம்பரத்தைத் தாண்டி எங்குமே போகவில்லை. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியும் பல இடங்களில் மறைக்கப்பட்ட அகற்றப்பட்ட சம்பவங்களையும் மக்கள் காண நேர்ந்தது. இந்த நிலையில்தான் தற்போது 4 தொகுதி இடைத் தேர்தல் வந்துள்ளது. எனவே இப்போதாவது இந்த நான்கு தொகுதிகளிலும் திருமாவளவன் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒட்டப்பிடாரம்
நான்கில் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியாகும். மற்றவற்றில் சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் போட்டியிடுகின்றனர். இதில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கவுண்டர்கள், பிள்ளைமார், முக்குலத்தோர் சமூகத்தினர்தான் அதிகம் உள்ளனர். தலித் வாக்குகள் இங்கு பெரிய அளவில் கிடையாது. எனவே 3 தொகுதிகளிலும் திருமா பிரச்சாரம் செய்ய திமுக அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.
அதிமுகவுக்கு வாய்ப்பு
குறைந்தது ஒட்டப்பிடாரம் தொகுதியிலாவது திருமாவளவன் போட்டியிடுவாரா என்பதும் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது. ஒரு வேளை நான்கு தொகுதியிலும் திருமாவளவன் பிரச்சாரம் செய்யாவிட்டால் அதை வைத்தே திமுகவுக்கு எதிராக அதிமுக, பாமக பிரச்சாரம் செய்ய வாய்ப்பாகி விடும் அபாயமும் உள்ளது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.