தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலுக்கு சான்ஸே இல்லை!??
சென்னை: தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அந்தத் திட்டத்தை பாஜக கைவிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. அத்தோடு சேர்த்து தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு பேச்சு நீண்ட மாதங்களாக அடிபட்டு வந்தது. குறிப்பாக ஜெயலலிதா மறைந்த சில மாதங்களிலேயே இந்தப் பேச்சு கிளம்பி விட்டது.
லோக்சபா தேர்தல் வரைதான் தமிழக அரசு நீடிக்கும். லோக்சபா தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
[அலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி!]
தேர்தல் தள்ளிப் போகும்
தமிழக சட்டசபைக்கு தேர்தல் தள்ளிப் போகும் என்று சொல்கிறார்கள். அதாவது முழு பதவிக்காலத்தையும் இந்த சட்டசபை முடிக்காது. அதேசமயம், லோக்சபா தேர்தலோடு சேர்த்தும் தேர்தல் நடைபெறாது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு சில மாதங்களிலேயே தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்றும் சொல்கிறார்கள்.
ஏன் இந்த முடிவு
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தெரியவில்லை. ஆனால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது ஒரு காரணமாம். காரணம் தமிழகத்தில் முதுபெரும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாத இந்த நேரத்தில் சரியான முறையில் திட்டமிட்டு செயலாற்றி துல்லியமாக வெற்றியைப் பறிக்க பாஜக தலைமை தீவிரமாக உள்ளது, கவனமாகவும் உள்ளது.
இரு தேர்தலும் தேவையில்லை
எனவே இரு தேர்தலையும் ஒரே நேரத்தில் வைத்தால் குழப்பம் ஏற்படும், போட்டிகளும் கடுமையாக இருக்கும். கவனம் சிதறும் என்பதால் லோக்சபா தேர்தலோடு தமிழக சட்டசபைத் தேர்தலை இணைக்க வேண்டாம் என்று டெல்லி வட்டாரம் நினைக்கிறதாம். இதனால்தான் சட்டசபைத் தேர்தல் தள்ளிப் போகும் என்று கூறுகிறார்கள்.
ரஜினிக்கு அப்பாடா
இப்படி தேர்தல் தள்ளிப் போவதால் ரஜினி தரப்பு மிகவும் ரிலாக்ஸ் ஆகியுள்ளதாம். காரணம், இன்னும் தேர்லை சந்திக்கும் அளவுக்கு அவர்கள் தயாராகவில்லை. கட்சி இன்னும் தொடங்கவில்லை. மன்ற அளவில்தான் உள்ளது. அதிலும் கூட ஏகப்பட்ட குழப்பங்கள். நிர்வாகிகள் மாற்றம் என்று உழன்று கொண்டுள்ளதால், இரு தேர்தலையும் சந்திக்க ரஜினிக்கு தயக்கம் உள்ளதாம். தேர்தல் தள்ளிப் போனால் சற்று பரவாயில்லை என்று அவர் நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கமல் ஹேப்பி அண்ணாச்சி
அதேசமயம், கமல் ஹாசன் தரப்பு எந்த மாதிரி தேர்தல் வந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடுவது என்று உற்சாகமாக காத்திருக்கிறதாம். கமல் போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் வருவதாலும், மக்கள் ஆர்வத்துடன் அவர் பேசுவதைக் கேட்பதாலும், கட்சிப் பெயர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆகி விட்டதாலும், நிச்சயம் வரும் தேர்தலில் மகத்தான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கமல் உள்ளாராம்.
பார்க்கலாம் யார் கணக்கு பலிக்கப் போகிறது என்று.