அரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வரவுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொறுத்தவரை தமிழக பிரச்சனைகளுக்காக சுற்றி சுழன்று பம்பரமாக பணியாற்றக்கூடியவர். அரசியலுக்கு அவசியமான ஒன்று சுறுசுறுப்பு. அந்த சுறுசுறுப்பு தான் வைகோவின் அதீத பலம் .
கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் வைகோ, தன்னை தவிர தனது குடும்பத்தினர் யாரையும் கட்சியிலும் சரி, பொது இடங்களிலும் சரி முன்னிலைப்படுத்தியதில்லை. இந்நிலையில் அவருக்கு வயது ஏறத்தாழ 70-ஐ கடந்து விட்டதால், கட்சியை வழிநடத்த, குறிப்பாக கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச புதுமுகம் தேவைப்படுவதாக கூறுகின்றனர் மதிமுக சீனியர்கள்.
இந்நிலையில், வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சிப்பணிகளில் களமிறக்க அவர்கள் விரும்புகிறார்களாம்..இது தொடர்பாக வைகோவிடம் சிலர் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், வைகோ தனது மகனை அரசியலில் திணிக்க விரும்பவில்லையாம்.
வாரிசு அரசியல் பற்றி ஊரே விமர்சனம் செய்துவிட்டு தானும் அந்த காரியத்தை செய்தால் நல்லா இருக்காது என நினைக்கிறாராம். ஆனால் கட்சியினர் விடுவதாக இல்லையாம். எப்படியாவது வைகோவின் மனதை கரைத்து துரை வையாபுரியை கட்சிப்பணிகளில் ஈடுபடுத்த வைக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்களாம்.
தமிழக அரசியல் தலைவர்களிலேயே தனது குடும்பத்தினரை அரசியலுக்குள் திணித்து அக்கப்போர் செய்யாத ஒரே அரசியல் தலைவர் வைகோதான். இந்த நிலையில் அவரது மனதையும் கரைக்கும் வேலையில் மதிமுக நிர்வாகிகள் சிலர் இறங்கியிருப்பதால் துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பர்ப்பு எழுந்துள்ளது.