கருணாநிதி மறைந்த போது ஸ்டாலினின் இமேஜையும் போராட்ட குணத்தையும் உயர்த்தியவர் வில்சன்
Recommended Video
சென்னை: கருணாநிதி மறைந்த போது ஸ்டாலினின் இமேஜை வெளியுலகுக்கு உயர்த்தி காட்டிய பெருமை வில்சனையே சாரும்.
கருணாநிதி என்ற மிகப் பெரும் ஆளுமை இறப்பதற்கு முன்பு ஓராண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கட்சிக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கடந்த ஜூலை மாதம் இறுதியில் மிகவும் மோசமானது.
இதையடுத்து அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். 11 நாட்களாக மருத்துவமனையில் சுவாசக் கோளாறால் போராடிய அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வாங்கித் தந்த வில்சனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி
குடும்பத்தினர்
கருணாநிதி நன்றாக இருக்கும் போதே தான் இறந்தால் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் தனக்கு ஒரு இடம் வேண்டும் என்றும் தனது சமாதியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி
இந்த நிலையில் அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக கருணாநிதிக்கு அண்ணா சமாதிக்கு அருகில் ஒரு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
கருணாநிதிக்கு 2 ஏக்கர் இடம்
ஆனால் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டிய எடப்பாடி தரப்பு அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரே உள்ள காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய 2 ஏக்கர் இடம் அளிப்பதாக தெரிவித்தது.
அஞ்சலி
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரவோடு இரவாக திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கானது ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை ஒத்திவைக்கப்பட்டு அப்போது விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் கருணாநிதியின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.
தலைவர்கள்
அப்போது மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வந்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காலை 8 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது.
கும்பிட்டு
அப்போது திமுக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மறைந்த கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை கேட்டதும் கருணாநிதியின் உடலுக்கு பக்கத்தில் இருந்த ஸ்டாலின் கண்கலங்கி மக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார். அவரை துரைமுருகன், ஆ ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தேற்றினர்.
வரவேற்ற மக்கள்
போராட்டக் குணம் உடைய கருணாநிதி கடைசி மூச்சுவரை போராடி, தான் விரும்பிய அண்ணாவுக்கு அருகில் ஒரு இடத்தை பிடித்தார் என்றும் தந்தையின் விருப்பத்தை போராடி நிறைவேற்றினார் ஸ்டாலின் என்றும் ஊடகங்கள் பாராட்டின. மாபெரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் துக்கத்திலும் இது போல் தீர்ப்பை மக்கள் கைதட்டி வரவேற்றனர். இத்தனைக்கும் காரணமான வழக்கறிஞர் வில்சனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.