தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் திமுக நிச்சயம் அபார வெற்றி பெறும்.. ஸ்டாலின் நம்பிக்கை
அரவக்குறிச்சி: தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை கைப்பற்றியதுதிமுக. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு!
உள்ளாட்சி தேர்தலுக்கும் ஆதரவு திரட்டி பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அதி முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் தண்ணீருக்காக குடத்துடன் தெரு தெருவாக அலைவதை பார்க்கும் போது வேதனையாக உள்ளதாக கூறினார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது கூட்டு குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களின் தண்ணீர் பிரச்சனையை ஓரளவிற்கு தீர்த்து வைத்தோம் என நினைவு கூர்ந்தார். ஆனால் இந்த ஆட்சியில் மக்கள் சுத்தமாக கண்டு கொள்ளப்படுவதில்லை. நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினாலும் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை தமிழக அரசு துணிந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துமானால், நிச்சயம் அதில் திமுக அபார வெற்றி மக்கள் பிரச்சனைகளை களைய தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர் திமுக-வை பொறுத்த வரை வெற்றி பெற்றாலும் தோல்வியை சந்தித்தாலும் எப்போதும் மக்களுடனே இருப்போம். மக்கள் நம்மை தேடி வர கூடாது. நாம் தான் மக்களை தேடி சென்று அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என, திமுக சட்டமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கும், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் தாம் அறிவுறுத்தியுள்ளதாக பேசினார் ஸ்டாலின்.
எனவே தோ்தலில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள், பொதுமக்களை தேடி வந்து குறைகளை கேட்டு தீர்த்து வைப்பார்கள் என்றார்.