இப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்
சென்னை: ஒரு பக்கம் மழை சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் மக்களுக்கு அதை விடவும் பெரிய அச்சம் காற்றின் வேகம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றிதான்.
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களாக, காற்றின் வேகம் பற்றி மாறி மாறி வெளியிட்டு வரும் அறிவிப்புகள் மக்களிடையே பீதி ஏற்படுவதற்குக் காரணமாகும்.
புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, நேற்று முன்தினம் பதிலளித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்தார்.
ஆனால் நேற்று அவர் அளித்த பேட்டியின்போது, புயல் கரையை கடக்கும்போது, டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை பிறப்பித்தார்.
155 கி.மீ வேகத்தில் காற்று
2016ஆம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயல் வீசியபோது, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இப்போது, அதை விட அதிக வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது வெறும் டிரைலர்தான், மெயின் பிக்சர் இனிதான் இருக்கிறது என்பதை போல இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றொரு, எச்சரிக்கையை பிறப்பித்தது. இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் புயல் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் அதிக பட்சமாக 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத வேகம்
சமீபகாலங்களில், எப்போதும் 155 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தில் எந்த புயலும் கரையை கடந்தது கிடையாது. அந்த அளவுக்கு வேகம் அதிகரிப்பதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் வானிலை ஆய்வு மையம் புயலின் வேகம் அதிகரிக்கும் என்று தான் கூறுகிறதே தவிர குறையும் என்று கூறவில்லை. அப்படிப் பார்த்தால் புயல் கரையை கடக்கும்போது இப்போது அதை விடவும் கூடுதல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
மரங்கள் நிலை
இந்த அளவுக்கான காற்று வீசும்போது அதை தாக்குப் பிடிக்கும் அளவுக்கு நமது மரங்களுக்கு பலம் இருக்குமா, எத்தனை ஆயிரம் மரங்கள் வேரோடு பிடுங்கி எறிய படுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உறுதியற்ற கட்டடங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்கள் கட்டிடங்கள் தாக்குப்பிடிக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
உள் தமிழக மாவட்டங்கள்
இவ்வளவு வேகமாக காற்று வீசுவதால், கடலோர பகுதிகள் மட்டும் கிடையாது. அந்த காற்றின் தாக்கம் உள் தமிழகம் வரை வரக்கூடும் என்ற அச்சம் அம்மாவட்ட மக்களுக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காற்றின் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் புயல் கரையை கடந்த பிறகு இந்த மாவட்டங்கள் வழியாக, வடமேற்கு திசையை நோக்கி நகரும். அப்போது பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகா பகுதிகள் வழியாக பயணிக்க கூடும். எனவே காற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று கணிப்புகள் வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை அவசியம்
வீட்டு மொட்டை மாடிகளில் உள்ள தண்ணீர் டேங்குகளை, முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வது நல்லது, காலியாக இருக்கக்கூடிய டேங்க் என்றால் காற்று அடித்து வீழ்த்திவிடும் என்பது போன்ற, பல்வேறு டிப்ஸ் மக்களால் வேகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. எனவே, மக்களே, புயல் கரையை கடக்கும் முன்பும், கரையை கடக்கும் நேரத்திலும், பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்குமாறு அரசு கேட்டுக் கொள்கிறது.