"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்!"
சென்னை: மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் நடந்தது என்ன என்பது குறித்தும் இறந்த பெண் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார் என்றும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.
Recommended Video
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 24 ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் உள்ள இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது சூலேறிக்காடு அருகே அவர்கள் அதிவேகமாக வந்ததால் அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது யாஷிகாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவுக்கும் அவரது இரு ஆண் நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
மாமல்லபுரம் அருகே விபத்து நடந்தது எப்படி?.. போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த யாஷிகா ஆனந்த்!
யாஷிகாவின் தோழி
இந்த நிலையில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கடந்த வாரம்தான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததும், ஹைதராபாத்தை சேர்ந்த இவர் யாஷிகாவின் நண்பர் என்பதாலும் அவர் சென்னையில் இருப்பதாலும் அவரை பார்க்க வந்த போதுதான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார் என தெரிகிறது.
கார்கள்
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் வரிசையாக 4, 5 கார்கள் சர்புர் என வந்து கொண்டிருந்தன. எல்லாமே அதிவேகமாக வந்தன. அதில் இருந்தவர்கள் போதையில் காரை ஓட்டி வந்தனர். அவருடன் வந்தவர்கள் காரின் மேல் டாப்பை திறந்து வைத்து கத்திக் கொண்டே வந்தனர்.
விபத்து
இந்த நிலையில் நடிகை யாஷிகா வந்த கார் தடுப்பு சுவரில் மோதியது. இதனால் 4 முறை பல்டி அடித்துவிட்டு ஒரு கி.மீ. தூரத்தில் கவிழ்ந்தது. உடனே நாங்கள் ஓடி சென்று பார்த்தோம். அப்போது அந்த வண்டியில் இருந்தவர்கள் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்கவே பார்த்தார்கள்.
பர்ஸ்
மேலும் தங்கள் பணம், பர்ஸ், பை உள்ளிட்டவற்றை எடுப்பதில்தான் குறிக்கோளாக இருந்தனர். இவர்கள் அங்கிருந்து தப்பியவுடன் போலீஸார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு இடத்தில் ஒரு பெண் அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
நாடித்துடிப்பு
அவரை பார்த்த போது அவருக்கு உயிர் இருந்தது. இதையடுத்து அவரை அப்பகுதியாக வந்த மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். அப்போது அந்த பெண்ணுக்கு காதிலிருந்து ரத்தம் வழிந்துவிட்டது. கைகளில் எல்லாம் வெட்டுக் காயம். மேலும் அவரது நாடித்துடிப்பும் குறைந்து கொண்டே இருந்தது.
தப்பித்தல்
எனினும் சீக்கிரம் கொண்டு சென்றால் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்றார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். சுமார் 1 மணி நேரமாக அந்த பெண் உயிருக்கு போராடி வந்தார். அவருடன் வந்தவர்கள் யாராவது மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அந்த பெண் இறந்திருக்க மாட்டார். ஆனால் அவர்களது நோக்கம் அந்த இடத்தை விட்டு தப்பிப்பதாகவே இருந்தது என்றார்.