திடீரென வெடித்த கரண்ட் பாக்ஸ்.. தெருவில் நைட்டியுடன் பற்றி எரிந்து கருகிய பெண்.. பரபர வாக்குமூலம்
உயிரிழந்த பெண் வாக்குமூலம் தந்துள்ளார்
சென்னை: "என் தங்கச்சிகிட்டே போன்ல பேசிட்டே நடந்து வந்தேன்.. அப்பதான் அது வெடிச்சது.. உடனே என் நைட்டியெல்லாம் தீ பிடிச்சுக்கிச்சு' என்று இறப்பதற்கு முன்னதாக லீமா ரோஸ் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை சூளைமேடு புதிய மேற்கு தெருவைச் சேர்ந்த தம்பதி ஜேம்ஸ் - லீமா ரோஸ்.. லீமாவுக்கு 35 வயதாகிறது. கடந்த 4-ம் தேதி இரவு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்.. அந்த மளிகை வீட்டு பக்கத்திலேயே உள்ளது.. அதனால் நைட்டியுடனே கடைக்கு சென்றார்.
ஆண்டவர் தெரு ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகில் தரையில் புதைக்கப்பட்டிருந்த மின்இணைப்பு பெட்டியில் இருந்த கேபிள் திடீரென வெடித்து சிதறியது.
பிறகு அடுத்தடுத்த செகண்டுகளில் அந்த கேபிள் எரிந்து, தீப்பொறிகள் வெளியே சிதறி அந்த தெரு முழுவதும் பரவியது.. அந்த சமயத்தில்தான் லீமா ரோஸ் நடந்து வந்து கொண்டிருந்தார்.. பரவிய சில தீப்பொறிகள் லீமா ரோஸ் மீது விழுந்தது. நைலான் நைட்டியை அவர் அணிந்திருந்ததால், தீ வேகவேகமாக நைட்டியில் பற்றிக் கொண்டு, கொழுந்துவிட்டு எரிந்தது.. இதனால் வலி தாங்க முடியாமல் லீமா கதறினார்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தண்ணீரை அள்ளி அவர் மீது ஊற்றினர்.
மேலும் தெருவில் கிடந்த மண்ணை வாரி வாரி இறைத்து தீயை அணைக்க முயன்றனர்.. ஆனால், அதற்குள் லீமாவின் உடல் கிட்டத்தட்ட 80 சதவீதம் கருகிவிட்டது. உடனடியாக அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே லீமா ரோஸ் உயிர் பிரிந்தது. நைலான் நைட்டி அணிந்திருந்ததாலேயே தீ வேகமாக பரவி உயிரிழப்பு வரை சென்றிருப்பதாக கருதுகிறார்கள். முன்னதாக, சூளைமேடு போலீசார் லீமா ரோஸிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது லீமாரோஸ் சொன்னதாவது:
"என் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதூர்... என் கணவர் 15 வருஷத்துக்கு முன்னாடியே உடம்பு சரியில்லாம இறந்துட்டாரு.. லாரன்ஸ் என்ற மகன் இருக்கிறான்.. அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்.. பிழைப்பு தேடி 9 வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு வந்தேன்.. 3 வருஷமா ஒரு பிரைவேட் காலேஜில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறேன்.
வீட்டு பக்கத்தில் உள்ள மளிகை கடையில் என் பையன் வேலைக்கு போகிறான்.. மளிகை வாங்கிக்கிட்டு என் தங்கச்சிகிட்ட போனில் பேசிட்டே தெருவில் வந்தேன்.. அப்பதான், தரையில் இருந்த கரண்ட் பாக்ஸ் தீப்பிடித்து எரிந்தது... உடனே கரண்ட் போய்டுச்சு.. நான் பயந்து விலகி வருவதற்குள் என் நைட்டியில் தீ பிடிச்சிடுச்சு.." என்றார்.
இதற்கு சிகிச்சை பலனின்றி லீமா ரோஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.. தாய், தந்தையை இழந்த மகன் தவிப்பதை கண்டு அப்பகுதி மக்கள் கலங்கி போய் உள்ளனர்!