மாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்!
அரக்கோணம்: மாமனார் வாங்கி வந்த பூச்சி கொல்லி மாவை... மைதா மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார்.. போண்டா சாப்பிட்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்... அரக்கோணம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்... யாரும் பெரும்பாலும் வெளியே வருவதில்லை.. அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே வெளியில் வருகின்றனர்.
அந்த வகையில், அரக்கோணம் அடுத்த எஸ்ஆர் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி... வீட்டுக்கு தேவையானதை இவர்தான் சென்று வாங்கி வருவார்.. இவர் வீட்டில் போண்டா செய்ய சொல்லவும், மருமகள் பாரதி மாவு இல்லை என்று சொல்லி உள்ளார்.
அதனால் போண்டா செய்வதற்காக மைதா மாவு வாங்கி வர சொல்லவும், பெரியசாமி கடைக்கு சென்று மைதா மாவு வாங்கினார்.. அத்துடன், மிளகாய் தோட்டத்திற்கு பூச்சிக்கொல்லி மாவையும் அந்த கடையிலேயே வாங்கி வந்துள்ளார். 2 மாவையும் ஒன்றாக வைத்துவிடவும், இது தெரியாமல் இவைகளை கலந்து போண்டா சுட்டிருக்கிறார் பாரதி!!
கணவர் சுகுமார் மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி ஆகியோருக்கு சுடச்சுட போண்டோ சுட்டு தந்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். போண்டா சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் மொத்த குடும்பமும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். பிறகு அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்தனர்.. ஆனால் பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.