இரு பஸ்களுக்குள் சிக்கி பெண் பலி.. சென்னை, தி.நகர் பஸ் நிலையத்தில் கொடூரம்
Recommended Video
சென்னை: தி.நகர் பேருந்து நிலையத்தில் 2 பஸ்களுக்கு இடையே சிக்கி பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடி தெருவை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மனைவி வள்ளி (48). இவர், பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை பெருங்குடி செல்வதற்காக தி.நகர் பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் வள்ளி.
அருகருகே பஸ்கள்
அப்போது, தி.நகரில் இருந்து கண்ணகி நகர் செல்லும் 5ஜி, டவுன் பஸ்சும், தி.நகரில் இருந்து திருப்போரூர் செல்லும் 519ம் எண் மாநகர டவுன் பஸ்சும் அருக்கருகே நிறுத்தப்பட்டிருந்தன. இட நெருக்கடி காரணமாக இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தது.
திடீர் இயக்கம்
இதனிடையே, பஸ் நிலையம் சென்ற வள்ளி 5ஜி மாநகர பஸ்சில் ஏறுவதற்காக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்களுக்கு நடுவே நுழைந்து சென்றுள்ளார். அப்போது, திருப்போரூர் செல்லும் 519 தடம் எண் டவுன் பஸ்சை அதன், டிரைவர் ரவி இயக்க ஆரம்பித்துள்ளார்.
பலியான பெண்
வள்ளியை கவனிக்காமல், டிரைவர் ரவி பஸ்சை இயக்கியதால், இரு பஸ்களுக்கும் நடுவே நசுங்கிய வள்ளி கத்தி கூச்சலிட்டார். ஆனால், பஸ் மோதிய வேகத்தில்
வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
டிரைவர்களிடம் விசாரணை
விபத்து குறித்து மாம்பலம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், வள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதாக டிரைவர் ரவி மற்றும் 5ஜி மாநகர பஸ் டிரைவர் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.