சரமாரி அரிவாள் வெட்டு.. வெடிகுண்டு வீச்சு.. நடு ரோட்டில் மோதிய ரவுடிகள்.. 3வது மனைவி மலர் கைது!
அண்ணாசாலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் வக்கீல் கைதாகி உள்ளார்
Recommended Video
சென்னை: "என்னை யாராச்சும் காப்பாத்துங்க" என்று நடுரோட்டில் கதறிய ரவுடியின் 3-வது மனைவி மலர்கொடியை போலீசார் கைது செய்து புழலில் அடைத்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தோட்டம் சேகர். அதிமுக பிரமுகரான இவர் சில வருஷத்துக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி மலர்க்கொடி. வக்கீலாக உள்ளார். இவரும் அதிமுக பிரமுகர்தான்.
நேற்று மதியம் 1 மணி இருக்கும். எழும்பூர் கோர்ட்டுக்கு போய்விட்டு, தன்னுடைய மகன் அழகர் ராஜாவுடன் மவுன்ட் ரோடில் ரிச்சி தெரு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் பாதுகாப்புக்காக 4 பேர் சென்று கொண்டிருந்தனர். எப்போதுமே அழகர் ராஜாவின் பாதுகாப்புக்காக இவர்கள் கூடவே இருப்பார்களாம்.
வெட்டு
அப்போது, 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று பின்தொடர்ந்து வந்து, அரிவாள், கத்தியால் மலர்க்கொடி, அழகர் ராஜாவை சரமாரியாக தாக்கி வெட்டியது. இதை கொஞ்சமும் 2 பேரும் எதிர்பார்க்கவே இல்லை. அதனால், ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடினர்.
மலர்க்கொடி
அழகுராஜா, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து கொண்டார். மலர்க்கொடி மட்டும் அவர்களிடம் சிக்கி கொண்டார். அந்த கும்பல் மலரை அரிவாளால் வெட்டியது. "என்னை காப்பாத்துங்க" என்று மலர் நடுரோட்டிலேயே கதறினார். பின்னர் கூட்டம் சேருவதற்குள், வந்த ஆட்டோவிலேயே ஏறி தப்பி விட்டது அந்த கும்பல்.
சிதறி ஓடினர்
இதை பார்த்ததும், ஆட்டோவில் பாதுகாப்புக்காக முன்னாடி போய் கொண்டிருந்த 4 பேரும் இந்த கும்பல் மீது வெடிகுண்டு வீசி தாக்க முயன்றனர். அந்த வெடிகுண்டு, அவர்கள் மேல் படாமல், ரோட்டில் விழுந்து வெடித்துள்ளது. இதில்தான் அங்கிருந்த மக்கள் கூட்டம் சிதறி ஓடினர். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அந்த இடமே களேபரமாக காட்சி அளித்தது.
ரவுடிகள்
வெடிகுண்டு சத்தம் கேட்டு, ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காது கேட்காமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக போய் கொண்டிருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் இந்த வெடிவிபத்தில் மலர், அழகுராஜாவும் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனைவருமே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பாதுகாப்பு
இது தொடர்பாக மலர்க்கொடியையும், அவரது மகனையும் கொலை செய்ய முயன்றது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல, வெடிகுண்டு வீச்சு தொடர்பாக மலர்க்கொடி, அவரது மகன் அழகர்ராஜா, மற்றும் பாதுகாப்புக்காக உடன் வந்த, மணிகண்டன், விஜயகுமார், சங்கர் உள்ளிட்ட 5 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறை
இதையடுத்து மலர்க்கொடி, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் புழலில் அடைக்கப்பட்டனர். அழகுராஜா இன்னும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.