ஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே? பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்
பெருங்குடி பெண் கொலையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: குப்பை கிடங்கில் பெண்ணின் ஒரு கை, 2 கால்கள் மட்டுமே சிக்கிய நிலையில், இன்னும் உடலை கண்டுபிடிக்க முடியாமலும், கொலையுண்டவர் யார் என தெரியாமலும் போலீசார் திணறி வருகிறார்கள்.
பாதி சென்னையின் ஒட்டுமொத்த குப்பைகள் கொட்டப்படும் இடம் பெருங்குடி. இங்குள்ள பெரிய குப்பை கிடங்கில் வழக்கமாக சில பெண்களும், இளைஞர்களும் பிளாஸ்டிக்கை சேகரிப்பார்கள். அப்படித்தான் நேற்று முன்தினமும் குப்பையை கிளறி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பை கிடக்கவும், அதனை எடுத்து பிரித்த பார்த்தபோதுதான், அதில் ஒரு கை, 2 கால்கள் என பார்சல் செய்யப்பட்டு இருந்தது. அந்த கை ஒரு பெண்ணின் வலது கை எனவும், தங்கத்தில் ஒரு வளையல் போட்டிருந்தார் எனவும் தெரியவந்தது.
கைரேகை
மேலும் அந்த கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் என 2 டிசைன்களில் பச்சை குத்தப் பட்டுள்ளது. கால்களில் வெறும் மெட்டி மட்டும் அணிந்திருக்கிறார். அதனால் பெண்ணின் ஒரே ஒரு கையை வைத்து, அதன் ரேகைகளை எடுத்து விசாரணை நடக்கிறது.
3 தனிப்படைகள்
ஆனால் 2 நாட்களாக தேடி வந்தும் இன்னும் பெண்ணின் உடலை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனால் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.
காணாமல் போனவர்கள்
ஒரு பக்கம் அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு பக்கம் உடல்பாகங்களுடன் வந்த குப்பைகள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
குழப்பம் நீடிப்பு
கொலை செய்யப்பட்டவர் துணை நடிகையாக இருக்கலாம் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கண்டிப்பாக வசதியான வீட்டு பெண்தான் என்று போலீசார் சொல்கிறார்கள். எனினும் பெருங்குடி பெண் கொலையுண்ட விவகாரத்தில் மர்மமும், குழப்பமும் நீடித்து போலீசாரை திணறடித்து வருகிறது.