அஸ்வினியின் மன உளைச்சல்.. குழந்தைக்கும் விஷம் கொடுத்து.. தானும் உயிர் துறந்து.. பெரும் சோகம்!
மகனை கொன்ற தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: 2 குழந்தைகளுக்கும் வாய் பேச முடியாது, காதும் கேட்காது... இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட இளம்தாய் அஸ்வினி மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்!
சென்னை போரூரை அடுத்த தெள்ளியார் அகரம் தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் ஒரு பெயிண்டர்.
மனைவி பெயர் அஸ்வினி. 28 வயதாகிறது. இவர்களுக்கு 4 வயதில் பிரதீப், 2 வயதில் சக்திவேல் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ரூ.3 லட்சம்
பிரதீப்புக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது. இதனால் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தந்தார்கள், ஆபரேஷனும் செய்தார்கள், இப்போது பேசுவதற்காக தெரபியும் தரப்படுகிறது. இதற்கே 3 லட்சம் ரூபாய் வரை செலவாகி விட்டதாம்.
குறைபாடு
இந்த நிலையில், 2-வது மகன் ரொம்ப நாளாக பேசவில்லையே என்று ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் காட்டியதற்கு அவனுக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமில்லை.. இந்த குறையை சரி செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள்.
மன உளைச்சல்
இதை கேட்டதில் இருந்தே அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மூத்தமகன் பிரதீப்பை கணவனுடன் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறகு கணவன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தால், அஸ்வினி தூக்கு போட்டு கொண்டு இறந்த நிலையில் கிடந்தார். கட்டிலின்மேல் 2-வதுமகன் சக்திவேலும் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியானார்.
விசாரணை
இது குறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை நடக்கிறது. 2 மகன்களுமே காது மற்றும் வாய் குறைபாடுகளுடன் பிறந்ததால் வேதனையடைந்த அஸ்வினி, மகனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.