உலகிலேயே முதல் முறையாக "பொன் மாணிக்கவேல் காவடி" அறிமுகம்.. திருத்தணி கோவிலில்!
பொன்.மாணிக்கவேல் போல வேடமிட்டு பெண் ஒருவர் காவடி தூக்கி வழிபட்டார்.
Recommended Video
சென்னை: அதே தொப்பி... அதே முறுக்கு மீசை... கழுத்து காலரில் அதே டை... என காட்சியளித்தார். அப்படியென்றால் "அவர்"தானா என்று கிட்ட போய் பார்த்தால், "அவர் " கிடையாது!! அதாவது "அவர்" பொன். மாணிக்கவேல் கிடையாது!!
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பதவி ஓய்வு பெறும் நாள் வந்தது.
ஆனால் அன்றைய தினத்துக்கு முன்பிருந்தே, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கினால் நல்லா இருக்குமே என தமிழக மக்கள் ஆசைப்பட்டார்கள்.
சிறப்பு பூஜை
இதற்காக அன்றைய தினம் காலையிலேயே, அவர் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில் பொன் மாணிக்கவேல் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை செய்தது அப்பகுதி மக்கள்தான். எல்லோருமே இந்த பூஜையில் கலந்து கொண்டு பொன்.மாணிக்கவேலுக்கு தங்களது வாழ்த்துகளை உரித்தாக்கினர்.
காவடி தூக்கினார்
ஆனால் இதேபோல, இன்னொருவரும், பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவடியே எடுத்துவிட்டார். இவர் பெயர் நர்மதா நந்தகுமார். சமூக ஆர்வலர். பொன்.மாணிக்கவேலின் அதிரடிகள் மீது தனி மரியாதை வைத்திருப்பவர். சென்னை, அண்ணா நகரில்தான் வசித்து வருகிறார்.
மீசை, தொப்பி
இவர் திருத்தணி முருகன் கோவிலில் இந்த காவடியை எடுத்து வழிபட்டிருக்கிறார். இன்னொரு சிறப்பு, பொன்.மாணிக்கவேல் போலவே வேடமிட்டு காவடி தூக்கி இருக்கிறார் நர்மதா. அன்றைய தினம் காலையிலேயே ஐகோர்ட் தீர்ப்பு, செய்தியாளர்கள் சந்திப்பு என பொன்.மாணிக்கவேல் சென்னையில் பரபரப்பாக இருந்த நேரம் அது.
நர்மதா மகிழ்ச்சி
அப்போதுதான் அவரை போலவே முறுக்கு மீசை வைத்து கொண்டு, தலையில் தொப்பி அணிந்து கொண்டு, சட்டை காலரில் "டை"யை தொங்கவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்குள் நர்மதா பூஜையில் ஈடுபட்டார். காவடி தூக்கி முடித்த நர்மதா, ஐகோர்ட்டின் பதவி நீட்டிப்பு உத்தரவை கேட்டதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்.