'வரி கட்டல..' கடைகளை இடிக்க முயன்ற அதிகாரிகள்.. பெண்கள் செய்த அந்த திடீர் சம்பவத்தால் பெரும் ஷாக்
சென்னை: மதுரவாயல் அருகே நெற்குன்றம் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பெண்கள், மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி அப்பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை முறையாகக் கட்டணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மதுரவாயல் தாசில்தார் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் இன்று குவிக்கப்பட்டனர். வாடகை செலுத்தாத கடைகளை இடிக்கப்போவதாக அறிவித்ததையடுத்து, அங்கு வசித்து வந்த பொதுமக்கள் கடைகளை இடிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒருகட்டத்தில் போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் தங்கள் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். மேலும், அங்கிருந்த போலீசார் மீதும் மண்ணெண்ணையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் சுமார் மூன்றரை மணி நேரம் வரை நீடித்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தீக்குளிக்க முயன்ற பெண்களை மீட்டு சமாதானம் செய்தனர். மேலும் வரி பாக்கி உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளை இடிக்காமல் பூட்டி சீல் வைத்து விட்டுச் சென்றனர்.
உடனடியாக வரி பாக்கியைச் செலுத்தாவிட்டால் கடைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.