பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து
சென்னை: நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்த கலந்துரையாடல், சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தால் தான் பெண்களுக்கான சமநீதியை பெற முடியும் என்றார்.
பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்களின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். நம்முடைய கருத்துகள் அங்கே பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடாவது நிச்சயம் தேவை என்றார்.
ஒரு சிந்தனை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால், எந்த ஒரு அங்கமாக இருந்தாலும் அங்கே சிறுபான்மையினர் பெண்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் இடமளிக்கப்பட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தினார்.
இதனை அடிப்படையாக வைத்து தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். இது நிறைவேற்றப்படாமல் இருக்கும் வரை, சட்டங்கள் மற்றும் நாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆணுடைய சிந்தனை மட்டுமே இருக்கும் என்றார்.
செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதை போல, நீதித்துறையிலும் பெண்கள் அதிகளவு வர வேண்டும் என கலந்துரையாடலின் போது பேசிய எம்பி ரவிக்குமார் வலியுறுத்தினார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எம்பி-க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.