மளிகை பொருட்கள் எல்லாம் வேண்டாம்.. முதலில் சானிட்டரி நாப்கின்களை கொடுங்கள்.. ஏழை பெண்கள் அவதி
சென்னை: எங்களுக்கு மளிகை பொருட்கள் கூட வேண்டாம். ஆனால் சானிட்டரி நாப்கின்கள் மட்டும்தான் தேவை என ஏழை மக்கள் தன்னார்வல அமைப்புகளிடம் கேட்பதாக தகவல்கள் வந்துள்ளன.
லாக்டவுனால் ஏராளமானோருக்கு வேலையில்லாமல் உள்ளது. சுமார் 40 நாட்களுக்கு மேலாக வருமானமின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் குடிக்க கஞ்சிக்கே வழியில்லாமல் அவதியுறும் நிலையை நாம் காண்கிறோம்.
"வூஹான்" கோயம்பேடு? ஊட்டி லாரி டிரைவர்களுக்கு கொரோனா டெஸ்ட்.. கிலியில் நீலகிரி!
இதனால் ஏழைகளுக்கு உதவ பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஏழை பெண்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் ரூ 30 கொடுத்து சானிட்டரி நாப்கின்களை வாங்கி தர பெற்றோர் யோசிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தன்னார்வல அமைப்புகள்
இதையடுத்து ஏராளமான பெண்கள் தன்னார்வல அமைப்புகளுக்கு போன் செய்து தங்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகளை காட்டிலும் முக்கிய தேவையாக சானிட்டரி நாப்கின்கள் உள்ளன என கோரிக்கை விடுத்துள்ளனர். இது போல் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு மளிகை பொருட்கள், உணவு கேட்கின்றனர்.
1000 அழைப்புகள்
ஆனால் பெண்களோ தங்களுக்கு சானிட்டரி நாப்கின்கள்தான் வேண்டும் என கேட்கிறார்கள். உணவில்லாமல் கூட இருக்க தயாராக உள்ளனர் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இது போல் 1000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகின்றனவாம். இது கடந்த மார்ச் மாதம் முதல் இந்த கோரிக்கைகள் வலுத்துள்ளன என கூறுகிறார்கள்.
விலை என்ன
தற்போது சானிட்டரி நாப்கின்களின் பற்றாக்குறையுள்ளதால் தினந்தோறும் தண்ணீர் பிரச்சினையில்லாமல் உள்ள பெண்கள் இருக்கும் பகுதிக்கு துணியிலாலான பேட்களை தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள். அவற்றை துவைத்து போட்டு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்பதால் இந்த ஏற்பாடு. தமிழகத்தில் ஒரு சானிட்டரி நாப்கினின் விலை ரூ 4 முதல் 15 வரை விற்கப்படுகிறது.
அச்சம்
அப்படி பார்த்தால் ஒரு மாதம் மாதவிடாய் சுழற்சிக்கு குறைந்தபட்சம் 15 நாப்கின்கள் பெண்களுக்கு தேவைப்படுகின்றன. தற்போது நாப்கின்கள் உற்பத்தியில்லாததால் அதன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டும் என பெண்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு பயனற்று போய்விடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் பழைய கால நடைமுறைகளுக்கு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.