5 ஆண்டு ஆட்சியை ஆணும், பெண்ணும் சமமாக ஏன் ஆளக்கூடாது? - ஓபிஎஸ் அதிரடியால் அதிர்ந்த அரங்கம்
அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி செய்ய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தங்களது பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தட்டிக் கேட்கும் நீதிமன்றமாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
Recommended Video
சென்னை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஏடிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்களால்தான், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாகவும், இதனை சீர்படுத்த வேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் மகப்பேறு நிதி உதவி 18000 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 5000 குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சேவைகள் அனைத்தையும் இன்றியமையாத சேவையாக அறிவிக்க முதல்வருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் உறுதியளித்தார்.
அரசின் 5 ஆண்டுகள் ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வேண்டும். 5 ஆண்டு ஆட்சியில் 2.5 ஆண்டுகள் பெண்கள் ஏன் ஆளக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார் துணை முதல்வர். 5 ஆண்டு கால ஆட்சியை ஆணும், பெண்ணும் சமமாக ஏன் ஆளக்கூடாது?. ஆணுக்கு பெண் சமம் என்பதை உருவாக்கினால் சமுதாயத்தில் மாற்றம் உண்டு என்றும் தெரிவித்தார். அவர் பேசியதை கேட்டதும் அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழகத்தில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தங்களது பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தட்டிக் கேட்கும் நீதிமன்றமாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இந்த கருத்தரங்கில் பெண்கள் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட ஆலோசனைகளை செயல்படுத்த முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.