பாஜக, அதிமுக மீது தமிழக பெண்கள் கடும் கோபம்.. 3 விஷயம்தான் முக்கிய காரணம்.. எப்படி சமாளிப்பார்கள்?
Recommended Video
சென்னை: எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் பெண்களிடம் நன்மதிப்பைப் பெற்று விட்டால், தேர்தல் வெற்றியில் பாதி உறுதியாகிவிட்டது போலத்தான்.
அதிமுகவின் முதலாவது பொதுச் செயலாளரான எம்ஜிஆர், பெண்களிடம் மிகுந்த ஈர்ப்பை பெற்றிருந்தார். அந்த ஈர்ப்பை ஜெயலலிதா தக்கவைத்துக் கொண்டார்.
திமுகவை விடவும் அதிகப்படியாக வருடங்கள் தமிழகத்தை, அதிமுக, ஆட்சி செய்வதற்கு முக்கியமான காரணம், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களும் பெண்களின் வாக்கு வங்கியை வலுவாக உருவாக்கியதுதான்.
யாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா
பெண்கள் விவகாரம்
எனவேதான், எந்த ஒரு அரசாக இருந்தாலும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் விவகாரங்கள் என்றால் மிகுந்த சிரத்தை எடுத்து கவனத்துடன் செயல்படுவது வழக்கம். பெண்களை நேரடியாக பாதிப்பது, மொத்தம் மூன்று விஷயங்கள்தான், என்பதால், இந்த மூன்று விஷயத்திலும் எந்த ஒரு அரசும் தேவையின்றி, மூக்கை நுழைப்பது கிடையாது.
ஜெயலலிதாவின் முன்னுரிமை
இந்த சமூகத்தில் பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கிறது? சமையல் எரிவாயுவின் விலை என்ன? கேபிள் டிவி குறைந்த விலையில் தங்குதடையின்றி கிடைக்கிறதா? ஆகிய இந்த மூன்றையும் பெண் வாக்காளர்கள் மிகுந்த உன்னிப்புடன் கவனிப்பார்கள். எனவேதான் ஜெயலலிதா ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பு என்ற முழக்கம் அதிகம் முன்வைக்கப்படும். தனக்கு பாதிப்பு நேர்ந்து விட்டது என்று எந்த ஒரு பெண்ணாவது ஜெயலலிதாவிடம் முறையிட்டால், அல்லது பொது வெளியில் புகார் சொன்னாலும், நடவடிக்கை மிக தீவிரமாக இருந்தது. சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக புகாரில் ஜீவஜோதிக்கு, ஜெயலலிதா எந்த அளவுக்கு பக்கபலமாக செயல்பட்டார் என்பது இதற்கு ஒரு உதாரணம்.
எதிர்ப்பு அலை
ஆனால், இன்று நாடு முழுக்க, அதிலும் குறிப்பாக தமிழகத்தில், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் அதிமுகவுக்கு எதிராக பெண்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது அக்கட்சிகளுக்கு, நல்ல அறிகுறி இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதற்கு முக்கிய காரணம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வும், கேபிள் டிவி கட்டண விலை உயர்வும் தான். விருப்பப்பட்ட சேனல்களை தேர்ந்தெடுக்கலாம் என்று டிராய் அமைப்பு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது முதலே மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
டிடிஹெச் சேவை முடங்கியது
150 ரூபாய்க்கு அனைத்து சேனல்களையும் கண்டு ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கேபிள் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் டிராய் அமைப்பின் புதிய விதிமுறைகளால், ஜெயலலிதாவின் திட்டம் அடித்து நொறுக்கப்பட்டு விட்டது. இப்பொழுது கேபிள் டிவியின் குறைந்தபட்ச கட்டணம் 250 ரூபாய் என்று ஆகிவிட்டது. அந்த அளவுக்கு பணம் செலுத்தினால் தான் முக்கியமான சேனல்கள் அனைத்தையும், கண்டு ரசிக்க முடியும். மற்றொரு பக்கம் டிடிஎச் சேவை ஸ்தம்பித்துவிட்டது. எந்த பேக்கேஜ்ஜை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்களுக்கும் தெரியவில்லை, அதைத் தெரிந்து கொள்ளலாம் என்று தொலைபேசியில் அழைத்தால், எப்போதும் பிஸி என்று சொல்லக்கூடிய டிடிஎச் நிறுவனங்களின் டோல் ஃப்ரீ (toll free) எண்கள் அவர்கள் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டன.
பெண்கள் கோபம்
தங்கள் அபிமான நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர். ட்ராய் என்பது தனித்து செயல்பட கூடிய அமைப்பு என்றாலும், ஆட்சியாளர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். கேபிள் டிவி கட்டணம் உயர்ந்து விட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால், கிராமத்தில் உள்ள பெண்களும் கூட, மோடி அரசு தான் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இது மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கும்தான் பெருத்த பின்னடைவு.
அதிக பணம்
சிலிண்டர் மானியத்தை வங்கிகளில் போடும் திட்டத்தின் காரணமாக, கையிலிருந்து அதிகப்படியான பணத்தை சிலிண்டருக்காக, வழங்குவதாக பெண்கள் உணர்கிறார்கள். வங்கியில் மானிய பணம் திரும்பி வந்தாலும் கூட, சிலிண்டர் டெலிவரி செய்யக்கூடிய நபரிடம் எந்த அளவுக்கு பணம் கொடுக்கிறோம் என்பது தான் மக்கள் மனதில் பதியும். அதுதான் பெண்கள் மனதிலும் பதிந்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் கேபிள் டிவி ஆகிய இரு விஷயங்களிலும் பெண்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்து விட்டன, மத்திய, மாநில அரசுகள். பொள்ளாச்சி பலாத்கார விவகாரமும், அதை தமிழக அரசு கையாண்ட விதமும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வியை அதிகரித்து விட்டது. எனவே தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் ஆகிவிட்டது என்று திமுக தனது டிவி பிரச்சார விளம்பரங்களில் மையக்கருத்தாக முன் வைக்க ஆரம்பித்துள்ளது. இதை மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள் எப்படி சமாளிக்க போகின்றன என்பதுதான் தெரியவில்லை.