கீதாக்களும்.. சந்தியாக்களும்.. சென்னையை "காக்கும்" பெண்கள் படை.. மாநகராட்சியின் வொண்டர் வுமன் குழு!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதிலும் முதல்வர் ஸ்டாலினுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் எவ்வளவு பங்கு இருக்கிறதோ.. அதே அளவு பங்கு சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கும் உள்ளது. சத்தமே இன்றி பெரிய பெண்கள் படை சென்னையில் கொரோனா தடுப்பில் முக்கிய களப்பணியை செய்துள்ளது.
சென்னையில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் வேகமாக பரவி வந்த சமயம். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றவுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பணி அவரிடம் இருந்தது. சென்னையில் தினசரி கேஸ்கள் 7000+ என்று பதிவாகிக்கொண்டு இருந்தது.
மும்பைக்கு இணையாக இந்தியாவின் அடுத்த எபிசெண்டர் ஆகும் அனைத்து சூழ்நிலைகளும் சென்னையில் நிலவின. இதையடுத்து சென்னையில் போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நேற்று புதிய கேஸ்கள் 1000க்கும் கீழ் சென்றன. சென்னை கொரோனாவில் இருந்து மிக வேகமாக 30 நாட்களில் மீண்டுள்ளது.
அரசு
சென்னையில் அரசும் மாநகராட்சி நிர்வாகமும் லாக்டவுனை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடவில்லை. ஏரியா வாரியாக நிறைய காய்ச்சல் முகாம்களை நடத்தினார்கள். காய்ச்சல் இருக்கும் மக்களின் மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். இந்த காய்ச்சல் முகாம்கள் மூலமே சென்னையில் கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்த காய்ச்சல் முகாம்களுக்காகவும், மக்களை தனி தனியாக கண்காணிக்கவும் களமிறக்கப்பட்டதுதான் சென்னை மாநகராட்சியின் பெண்கள் படை!
சென்னை சோதனை
சென்னையில் இருக்கும் ஒவ்வொரு வீடுகளில் தினமும் சென்று சோதனை செய்வதற்காக களமிறக்கப்பட்டதுதான் பெண்கள் படை. 21 வயதுக்கு மேற்பட்ட பல ஆயிரம் பெண்கள் இதற்காக சென்னையில் களமிறக்கப்பட்டு வீடு வீடாக சோதனை செய்தனர். தற்போதும் செய்து வருகிறார்கள். இவர்களின் பணி ஒன்றுதான், தினமும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் ஏரியாவிற்கு செல்ல வேண்டும். ஒரு வீடு விடாமல் எல்லா வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும்.
சோதனை
ஒரு 8 மாடி குடியிருப்பு இருக்கிறது என்றால், அந்த குடியிருப்பில் இருக்கும் எல்லா வீடுகளின் கதவையும் தட்டி, பொறுமையாக அவர்களிடடம் இந்த பெண்கள் விசாரிப்பார்கள். உங்கள் வீட்டில் எத்தனை பேர், காய்ச்சல் இருக்கிறதா, காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா, இருமல் இருக்கிறதா என்றெல்லாம் பொறுமையாக கேள்வி கேட்பார்கள். அதோடு அவர்களின் எண்களையும் நோட் புக்கில் எழுதிவிட்டு கனிவாக விசாரித்துவிட்டு செல்கிறார்கள்.
தினமும்
இது ஒரு நாளோ, வாரம் ஒரு முறையோ நடக்கும் நிகழ்வு அல்ல. தினமும் சென்னையில் இந்த பெண்கள் படை, விசாரிக்கிறார்கள். நேற்று ஒரு வீட்டில் விசாரித்தால், இன்று அதே வீட்டில் மீண்டும் விசாரிப்பார்கள். ஒரு நாள் கூட தவறாது எல்லா வீட்டிலும் சல்லடை போட்டு விசாரிக்கிறார்கள். யாருடைய வீட்டிலாவது அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனே சோதனை செய்ய ஏற்பாடு, காய்ச்சல் முகாமிற்கு அழைத்து செல்வது, தனிமைப்படுத்த மாநகராட்சிக்கு தகவல் தெரிவிப்பது என்று இவர்கள்தான் அரசுக்கும் - மக்களுக்கும் இடையிலான "பாலமாக" செயல்படுகிறார்கள்.
புள்ளிகள்
எஅரசையும் மக்களையும் இணைக்கும் அந்த புள்ளி இந்த பெண்கள் படைத்தான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சென்னையில் மே, ஜூன் வெயிலில், கொரோனா தீயாக பரவிய நேரத்தில், இவர்கள் இப்படி வீடு வீடாக சோதனை நடத்துவது நெகிழ வைக்கிறது. இதற்காக சென்னை மாநகராட்சி பல ஆயிரம் பெண்களை நியமித்துள்ளது. சிலரை மட்டும் நியமித்து அவர்களை பல இடங்களுக்கு அலைய விடாமல், தாராளமாக பலரை நியமித்து, பணிகளை பிரித்து கொடுத்துள்ளனர்.
மக்கள்
இதை பற்றி தற்போது மக்களே பாராட்டி எழுத தொடங்கி உள்ளனர். சந்தியா என்ற மாநகராட்சி ஊழியர் குறித்து இவர் செய்துள்ள டிவிட்டில்.. சந்தியா தினமும் வேளச்சேரி செல்லி அம்மன் நகர் வந்து தனது சோதனைகளை சிறப்பாக செய்கிறார். அதோடு மக்களிடம் கொரோனா டெஸ்ட், வேக்சின் கேம்ப் குறித்த அறிவுரை மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுகிறார் என்று பாராட்டி உள்ளார்.
கீதா
கீதா என்ற ஊழியர் குறித்து இவர் பாராட்டி செய்துள்ள போஸ்டில், தினமும் தவறாமல் எங்கள் அப்பார்மென்டுக்கு வந்து கனிவான சோதனை செய்து, அன்பாக விசாரிக்கும் கீதாவிற்கு நன்றி என்று கூறி இவர் போஸ்ட் செய்துள்ளார். கீதா சந்தியா என்று மட்டுமின்றி பல ஆயிரம் பெண்கள் சென்னையில் இப்படி ஏரியா வாரியாக மக்களின் உடல்நலன் குறித்து விசாரிக்கிறார்கள்.
கனிவு
விசாரிப்பதோடு வேக்சின் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். சில வீடுகளில் தினமும் கதவை தட்டி இவர்கள் விசாரிப்பதால் ஒரு சிலர் கோபம் அடைவதும் உண்டு. ஆனால் அவர்களிடமும் இவர்கள் கனிவாக பேசி, உடல்நலன் குறித்து விசாரிக்கிறார்கள். சென்னையில் கொரோனா பரவலை சத்தமே இன்றி இந்த பெண்கள் படை தடுத்துக்கொண்டு இருக்கிறது. வீடு வீடாக தினமும் சோதனை செய்யும் இந்த பணியை கடந்த அலையிலும் இவர்கள் மேற்கொண்டனர்.
பாராட்டு
சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற தகுதியான ஒரு கொரோனா தடுப்பு மாடல் ஆகும் இது. கொரோனா தடுப்பு பணி என்று வந்ததும் மேலிடத்தில் இருக்கும் தலைவர்கள் அவர்களின் செயலுக்காக பாராட்டப்படுகிறார்கள். ஆனால் கீதாக்கள், சந்தியாக்கள் போன்றவர்களின் பணிகள்தான் வெளியே தெரியாமலே போய்விடுகிறது. கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று, மக்களிடம் கனிவாக அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்கும் இந்த வொண்டர் வுமன்களுக்கு சல்யூட்!