மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவருக்கு வேலை.. தமிழ் இனத்திற்கு செய்யப்படும் துரோகம்.. மணியரசன் புகார்
சென்னை: அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதிமுக அரசு இனதுரோகத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசிய பேரியக்கம் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணிக்கான நேரடித் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வுகளைத் தொடர்ந்து பதவி ஒன்றுக்கு 5 பேர் என தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது. நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. இங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் உதவி மின்பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யபட்ட 300 பேரில், 36 பேர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தான் அது. மொத்த பணியிடத்தில் பிறமாநிலத்தவர்கள் சுமார் 12 சதவீதம் ஆக்கிரமித்துள்ளதை அறிந்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அஞ்சல் துறை, ரயில்வே துறைகளை தொடர்ந்து மின்துறையிலும் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் துவங்கியுள்ளதை அறிந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திக்காரர்களுக்கும், வெளி மாநிலத்தவர்களுக்கும் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கு இல்லாத முன்னுரிமை வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
மத்திய அரசு பணிகளில் தான் இந்நிலை என்றால் மாநில அரசுப் பணிகளும் வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவது தமிழ் இனத்திற்கே செய்யப்படும் துரோகம். அரசின் இச்செயலால் தமிழா்கள் தங்களது சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உதவி பொறியாளர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலில் ஆந்திரா, கேரளா, உத்தர பிரதேசம், பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பணி அமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரி தெளிவாக உள்ளது. இதில் 25 பேர் ஆந்திர தெலுங்கர்கள். ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் இவர்களை வடசென்னை, குந்தா, காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்வாரியம் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் தற்போது தேர்வானவர்களில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாக தமிழ் தேர்வுக்கு தயாராக வேண்டுமென கூறியுள்ளது. இதன் மூலம் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் வேண்டுமென்றே தெரிந்தே தான் அரசு பணியமர்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என மணியரசன் சாடியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகத்தை தமிழக அரசு நிறுத்தி கொண்டு தற்போது தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணியமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத்தவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.