“வொர்க் ஃப்ரம் ஹோம்..” மாற்றுத்திறனாளிகள் ஆபீஸ் போக தேவையில்லாத நிலைவரும்.. ஸ்டாலின் அசத்தல் தகவல்
சென்னை : மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்குச் சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழலை உருவாக்கப் போகிறோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசு செய்து வரும் பணிகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கொண்டு வரவுள்ள திட்டங்களையும் இன்று அறிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - 2022 விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் சொன்ன குட் நியூஸ்..இனி மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு
ஒரே ஒரு மாற்றுத்திறனாளிக்கு
பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நம்மைப் பொறுத்தவரை அனைத்து நாட்களிலுமே மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை செய்து வருகிறோம். அனைவரையும் திறமையாளர்களாக மாற்ற வேண்டும் என அரசு உறுதி எடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என அரசு செயல்பட்டு வருகிறது. ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் துன்பம் அடையக் கூடாது, ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் என்றாலும், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும் என்பது எனது நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.
கருணாநிதி வழியில்
மேலும் பேசிய அவர், உடல் குறைபாடாக இருக்கலாம், ஆனால் உள்ளக் குறைபாடு இல்லை, அறிவு குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து போற்ற வேண்டும், சமூகத்தில் மற்ற தரப்பினர் அடையும் அனைத்து வசதிகளையும், மாற்றுத்திறனாளிகளும் பெற வேண்டும். ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டார். அவர் வழியிலே இன்று நானும் அந்தத் துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புப் பாதை
சென்னை மெரீனா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை எனக் கருதி நாம் உருவாக்கிய பாதை தான் அந்த அன்புப் பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்தபோது, மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழ்ச்சியால் திளைத்ததைப் பார்த்து நானும் திளைத்தேன். அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
முன்னுக்கு வந்துவிட்டார்கள்
மாற்றுத் திறனாளிகளில் எத்தனையோ பேர் தமிழக அரசினுடைய நிர்வாகத்தின் அலுவலர்களாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்களாகச் செயல்படுகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கிவிடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.
எக்ஸ்பெர்ட் கமிட்டி
ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலை வாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
வொர்க் ஃப்ரம் ஹோம்
மேலும், "மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை நாம் உருவாக்க உள்ளோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டங்கள் தொடங்கப்படும். அதற்குச் சான்றாகத்தான் நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓய்வூதியம்
வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 த்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதிய உயர்வு மூலம் 4.39 லட்சம் மாற்று திறனாளிகள் பயன்பெறுவார்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.