பரோலில் வரப் போறாரா சின்னம்மா?.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்!
சென்னை: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்து சசிகலாவை பரோலில் அழைத்து வருவதற்கான பணிகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
வரும் மார்ச் மாதம் மன்னார்குடி திவாகரனின் (சசிகலாவின் தம்பி) மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் அதில் கலந்துகொள்வதற்காக சசிகலாவை அழைத்துவர முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதாவின் தோழியும், உடன் பிறவா சகோதரியுமாக விளங்கிய சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக நான்காண்டு சிறைதண்டனை பெற்று இப்போது சிறையில் இருந்து வருகிறார்.
சகோதரி
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரது உற்ற தோழியாகவும், உடன் பிறவா சகோதரியாகவும் இருந்து அவரை பார்த்துக்கொண்டதில் சசிகலாவின் பங்கு அளப்பறியது. ஜெயலலிதா அணிந்த காலணி முதல் அவருக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்கியவர் சசிகலா. ஜெயலலிதாவின் பார்வையை வைத்தே அவர் எண்ண நினைக்கிறார் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் கட்சியினரிடம் தகவல்களை கொண்டு செல்வார் சசிகலா. மொத்தத்தில் ஜெயலலிதாவின் மனசாட்சியாகவே திகழ்ந்தார் அவர்.
4 ஆண்டு தண்டனை
இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ-2 குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். சுமார் மூன்றாண்டுகளை சிறையில் கழித்த சசிகலாவுக்கு இன்னும் ஓராண்டு தான் தண்டனை காலம் உள்ளது. இதனிடையே அதற்கு முன்பாகவும் அவர் விடுதலையாக மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விரும்பவில்லை
கடந்த மூன்றாண்டுகளில் தனது கணவர் நடராஜன் மறைவின் போது மட்டும் ஒரு வார கால பரோலில் வந்திருந்தார் சசிகலா. அப்போது தஞ்சை இல்லத்தில் அவரை சந்தித்த மாற்றுக்கட்சியினர் பலரும் நடராஜன் மறைவுக்கு துக்கம் தெரிவித்ததோடு சசிகலா உடல்நலம் பற்றியும் கேட்டனர். திருநாவுக்கரசர், கே.என்.நேரு போன்றோரும் அதில் அடக்கம். அப்போது மிகுந்த மன உளைச்சலிலும், குழப்பத்திலும் இருந்ததால் சுற்றத்தார், உறவினர்களிடம் கூட சசிகலா சரியான முறையில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண விழா
ஆனால், இப்போது சிறைத்தண்டனை காலம் கிட்டதட்ட முடிவடையும் தருவாய் வந்துவிட்டதால் சற்று நம்பிக்கையுடனும், தைரியத்துடன் உள்ளார் சசிகலா. இந்நிலையில் தனது தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமணத்தில் கலந்துகொள்வது பற்றியும் சிந்தித்து வருகிறார் அவர். இதனிடையே அவரை பரோலில் அழைத்து வந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைப்பதற்கான பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருகின்றன.