தண்ணியடித்த நண்பர்கள்.. தூங்க இடம் பிடிப்பதில் தகராறு. கல்லை தூக்கி போட்டு.. ஒருவர் கொலை
கூலி தொழிலாளி ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சென்னை: தூங்கிறதுக்கு இடம் பிடிக்கறதுல 3 பேருக்கும் தகராறு நடந்து, அது கடைசியில் கல்லை போட்டு கொலை செய்யும் வரை போய்விட்டது.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். 52 வயதான இவர், லாரியில் இருந்து சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளி. கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
எப்பவுமே வேலை முடிந்ததும், நைட் ஆனவுடன் மாதவரம் மேம்பாலம் அருகேயுள்ள ஒரு டாஸ்மாக்கில் தண்ணி அடிப்பதுதான் கோவிந்தராஜன் பழக்கம்.
மது அருந்தினர்
அப்போது அவரது நண்பர்கள், மாதவரத்தை சேர்ந்த அன்பழகன் 33, சுரேஷ் 30, ஆகியோரும் கூட வருவார்கள். 3 பேரும் குடித்துவிட்டு, டாஸ்மாக் எதிரே உள்ள எடை மேடையில் போய் தூங்கி விடுவார்கள். நேற்றும்கூட 3 பேரும் ஒன்றாக சென்று தண்ணி அடித்தார்கள்.
இடம் கேட்டு தகராறு
ஃபுல் போதை ஆனவுடன், எடைமேடை அருகே தூங்க போனார்கள். அப்போது கோவிந்தராஜ் அந்த எடைமேடையில் முதலில் போய் படுத்து கொள்ள இடம் பிடித்தார். இதை பார்த்ததும் மற்ற இருவரும் அதே எடைமேடையில் படுக்க இடம் கேட்டு கோவிந்தராஜிடம் தகராறு செய்தார்கள். 3 பேருமே போதையில் இருந்ததால் தகராறு எல்லைமீறி போனது.
கல்லை போட்டு கொலை
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அன்பழகன், சுரேஷ் ரெண்டு பேரும் அங்கு கிடந்த ஒரு பெரிய கல்லை தூக்கி வந்து கோவிந்தராஜனின் தலையில் போட்டார்கள். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜன், ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேர் கைது
இதை பார்த்ததும் மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போலீசார் கோவிந்தராஜனின் உடலை கைப்பற்றியதுடன், தலைமறைவாக இருந்த அன்பழகன், சுரேஷை கைது செய்தனர். தூங்குவதற்கு இடம் பிடிக்க போய் நண்பனையே கல்லால் அடித்து கொன்ற சம்பவம் மாதவரம் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.