சென்னையில் வீடுகளுக்குள் புகுந்த அழுக்கு நீரை அகற்ற இவ்வளவு தண்டச் செலவா? நாற்றத்தில் மக்கள் தவிப்பு
சென்னை: சென்னையில் வீடுகளுக்குள் புகுந்த அழுக்கு நீரை அகற்ற 2 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை தொழிலாளர்கள் வசூலிக்கிறார்கள். அதற்கும் சரியான ஆள் கிடைப்பதில்லை. மாநகராட்சிக்கு வரி கட்டியது போக இப்படி தண்டச் செலவும் செய்து நாற்றத்தோடும் வாழ வேண்டிய நிலையில் சென்னை மக்கள் தவிக்கிறார்கள்.
சென்னையில் மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம்.. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தரை தளம் முழுமையாக தண்ணீரில் மூழ்கி உள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் கார்களை பழுது பார்க்கும் பணிகளை மக்கள் செய்து அதற்கு ஏகப்பபட்ட பணம் செலவாகும் நிலை உள்ளது. மறுபக்கம் இருசக்கர வாகனமும் தண்ணீர் புகுந்துள்ளதால் அதற்கும் கணிசமாக பணம் செலவு செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் அரிசி பருப்பு, மளிகை சமான்கள் மூழ்கி போய்விட்டன. டிவி, பிரிட்ஜ், வாசிங் மெசின், மின் மோட்டார், இபி வயர்கள் போன்றவை தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது. இதுதவிர அழுக்கு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தால், மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.. பல கடைகளில் இருந்த பொருட்கள் முழுமையாக அழிந்து போய்விட்டன... உயரம் குறைவாக தரை தளத்துடன் ஒட்டிய நிலையில் காணப்பட்ட வீடுகள், கடைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள நீர் வடிய வழி இல்லாத வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம் கீழ்கட்டளை, முடிச்சூர், வரதாஜபுரம், துரைப்பாக்கம், பெருங்குடி, காரப்பாக்கம், மணலி, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொரட்டூர், கொளத்தூர், அயனாவரம் போன்ற பகுதிகளில் அழுக்கு நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
தண்ணீர் மெயின் ரோடுகளில் வெளியேறிவிட்டாலும், வீடுகளுக்குள் புகுந்துள்ள அழுக்கு நீரை அகற்றி வீடுகளை சுத்தம் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கிறார்கள். சிறிய வீடுகளை பழையபடி மாற்ற 2 ஆயிரம் ரூபாய் வரையிலும். பெரிய வீடுகளை சரி செய்ய 7 ஆயிரம் வரை கேட்கிறார்கள். ஆனால் அதற்கும் சரியான ஆள் கிடைப்பதில்லை. வீடுகளில் குடியிருக்க ஆண்டுக்கு ஒருமுறை மாநகராட்சிக்கு வரி கட்டியது போக இப்படி தண்டச் செலவும் செய்து நாற்றத்தோடும் வாழ வேண்டிய நிலையில் சென்னை மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
உடைந்த அழுக்கான பொருட்களை குப்பையில் தூக்கிபோட்டுவிட்டு, தண்ணீரை வெளியேற்றி, பழையபடி வீட்டை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அனைத்து பொருட்களையும் வீட்டில் இருந்து வெளியில் தூக்கிவைத்து அதனை சுத்தம் செய்து மீண்டும் சரியாக வைக்க வேண்டும். கிட்டத்தட்ட வீட்டை காலி செய்து மீண்டும் புதிதாக குடியேறுவதற்கு சமம் என்பதால், அதனை முதியவர்கள், பெண்கள், நோய்வாய் பட்டவர்கள் செய்ய இயலாது. அதற்கு ஆட்களை கூப்பிட்டுத்தான் செய்ய வேண்டும். ஆனால் அதிகப்படியான பணம் கேட்கப்படுவதால் மக்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். ஏற்கனவே கார் போய், பைக்கும் போய், டிவி, வாசிங் மெஷின் பிரிட்ஜ், பீரோ கட்டில் என பொருட்களை இழந்த மக்களுக்கு, புதிதாக இந்த செலவு பெரும் துயரத்தை தந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் பல ஆயிரம் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால், உரிய ஆட்களும் கிடைக்கவில்லை.. மின்சாரமே 4 நாட்கள் கழித்து தான் வந்துள்ள நிலையில், பலரும் வீடுகளை அவர்களே சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அழுக்கு தண்ணீரை வெளியேற்றி ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர இன்னும் 3 நாட்கள் ஆகும். தண்ணீர் வடியாத பகுதிகள் என்றால் இன்னும் சில நாட்கள் கூடுதலாக ஆகும்.
மின்மோட்டார்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிப்போன நிலையில் அதையும் சரி செய்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்பதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். சில இடங்களில் மின்வயர்களை மாற்ற வேண்டியதும் உள்ளது. வீட்டு வாடகை, மளிகை, கரண்ட் பில், என பல செலவுகளை செய்து வாழும் சென்னை வாசிகளுக்கு மிக்ஜம் புயல் தந்துள்ள பாடம் என்னவென்றால் , சென்னையில் தரைதளத்தில் குடியிருக்கவே கூடாது என்பது தான்.












Click it and Unblock the Notifications