டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர் இவர்தான்.. ரிக்கி பாண்டிங்கே அசந்துட்டாரே
சென்னை: வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல.. என்று சில பாராட்டுகளை சிலாகித்துக் கூறுவார்கள்.
ஒரு துறையில் மிகவும் முன்னணியில் இருக்கும் ஜாம்பவான், அந்த துறையிலுள்ள மற்றொருவரை புகழ்ந்து பேசும்போது இப்படிச் சொல்வது வழக்கம்.
ஆனானப்பட்ட ரிக்கி பாண்டிங் ஒருவரை சிறந்த பந்து வீச்சாளர் என்று புகழ்கிறார் என்றால் அதற்கு நாம் மேலே சொன்ன உவமை சரியாக பொருந்தும் தானே.
ஆம், அப்படி ரிக்கி பாண்டிங்கின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார், ககிசோ ரபடா. டெல்லி கேப்பிடல்ஸ், அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது அணியின் அதி சிறந்த வேகப்பந்து வீச்சாளரான, ரபடாவை, 20 ஓவர் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பவுலர் என்று வர்ணித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் ரபடா. அவரது அதிரடி பந்து வீச்சு காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ், 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபடா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தற்போது இருக்கக்கூடிய மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவராக அறியப்படுபவர். 20 ஓவர் கிரிக்கெட்டிலும் அவர் முத்திரை பதித்து வருகிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலேயே மிகச் சிறந்த பந்து வீச்சாளர் இப்போதுதான் ககிசோ ரபடாதான் என்று, ரிக்கி பாண்டிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள்
இதுவரை நடப்பு ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரபடா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சஹல், டிரென்ட் போல்ட், முகமது ஷமி ஆகியோர் தலா 8 விக்கெட்டுகளுடன் உள்ளனர். நியூசிலாந்தை சேர்ந்த டிரென்ட் போல்ட் உலக மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளவர். அவரும் ரபடாவும், மிட்சேல் ஸ்டார்க், பும்ரா ஆகியோர்தான் சமகாலத்தில் ஒரு நாள் போட்டிகளில் மிகச்சிறந்த அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
நடராஜன் 5 விக்கெட்டுகள்
இந்த பட்டியலில், ஹைதராபாத் அணியின் துருப்புச்சீட்டு நடராஜன் 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் ரபடா எடுத்த விக்கெட்டுகள் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே அவர் சிறந்த பந்து வீச்சாளர் என்று சொல்லப்படுவது கிடையாது. சில பவுலர்களின் பந்துகள் நாலாபுறமும் அடிபடும். அப்போது விக்கெட்டும் விழும். ஆனால் ரபடா அப்படி இல்லை. ரபடா பந்துவீச்சில் எத்தகைய பேட்ஸ்மேனும் அடித்து ஆட அச்சப்படுகிறார்கள்.
ரபடா அபாரம்
மிகவும் அச்சுறுத்தும் பேட்ஸ்மேனான, ரசல் விக்கெட்டை ரபடா வீழ்த்தியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது, ஒரு யார்க்கர் பந்தை அனாயசமாக சிக்சருக்கு விலாசினார் ரசல். இதனால் ரபடா மீது அழுத்தம் அதிகரித்தது. ஆனால் அடுத்த பந்திலேயே எதிர்பாராத வேகத்தில் பவுன்சர் பந்தை வீசி ரசலை அவுட் செய்தார். அதுமட்டுமல்ல.. பஞ்சாப்புக்கு எதிரான சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழத்தி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றிக் கனியை தட்டிப்பறிக்க உதவினார். எந்த ஒரு நேரத்திலும் ரபடாவை நம்பினால் விக்கெட்டுகள் விழும் என்பதுதான் டெல்லி அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.