ஈழப் போராளி திலீபனின் 33-ம் ஆண்டு நினைவு நாள்- திருமாவளவன், சீமான், உலகத் தமிழர்கள் மலர் அஞ்சலி
சென்னை: அகிம்சையின் உன்னதத்தை உலகுக்கு உரத்து சொன்ன ஈழப் போராளி திலீபனின் 33-ம் ஆண்டு நினைவுநாளை உலகத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக இன்று கடைபிடித்தனர். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் திலீபன் உருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
இலங்கையில் 1987-ம் ஆண்டு இந்திய அமைதிப்படை அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது 1987 செப்டம்பர் 15-ந் தேதி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதி லெப். கேணல் திலீபன் சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்!!
செப்.26ல் திலீபன் மரணம்
ஆனால் திலீபனின் 5 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. திலீபனும் சொட்டு நீர் அருந்தாமலேயே 1987 செப்டம்பர் 26-ந் தேதி அதிகாலை உயிர்நீத்தார். திலீபனின் மரணம் உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமாவளவன் மலர் வணக்கம்
திலீபனின் 33-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு உலகத் தமிழர்கள் இன்று நினைவுகூர்ந்தனர். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திலீபன் உருவப்படத்துக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர்- சீமான் ஈகைச்சுடரேற்றல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈகைச் சுடரேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினார். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினர்.
இலங்கையில் கெடுபிடிகள்
இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் திலீபன் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. முல்லைத்தீவில் திலீபன் நினைவுநாளை முன்னிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். இருப்பினும் தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை போலீசார் திலீபன் நினைவு தினத்தை கடைபிடிக்கவிடாமல் கெடுபிடிகள் மேற்கொண்டனர்.