வாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி
சென்னை: வாசகர்கள் பாராட்டுகிறார்கள் பாருங்க.. அதுதாங்க உண்மையான விருது. மத்த விருதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குப்பைதான் என்று கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ராஜேஷ் குமார். முதல் கதை தொடங்கி இன்று வரை தனது 50 ஆண்டுகளில் 1500 நாவல்கள் அதற்கும் மேல் சிறுகதைகள், தொடர்கதைகள் என யாரும் அடைய முடியாத சாதனையை ஜஸ்ட் லைக் தட் சாதித்து வெற்றி நடை போட்டு வருபவர்.
ஒரு கதைக்கும் மறு கதைக்கும் இடையே எந்த ஒற்றுமையையும் பார்க்க முடியாது. அப்படி ஒரு சாதனையை எழுத்தை தன்னகத்தே வைத்திருப்பவர் ராஜேஷ் குமார். அவர் எழுத வந்து 50 ஆண்டுகளாகி விட்டது. அந்த அரிய சாதனையைப் பாராட்டும் வகையில் நேற்று சென்னை, மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பாராட்டு விழா
ராஜேஷ் குமாரின் தீவிர வாசகர்களும், பத்திரிகையாளர்களுமான கே.என். சிவராமன், யுவகிருஷ்ணா இணைந்து எடுத்த பாராட்டு விழா இது. இதில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால், எழுத்தாளர்கள் மனுஷ்ய புத்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா செளந்தரராஜன், தேவி பாலா, பாமா கோபாலன், வேதா கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அன்பு போதும்
அரங்கு நிறைந்த அந்த மன்றத்தில் ராஜேஷ் குமார் பேசுகையில், நானும் சிவராமனும் இதுவரை நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இன்றுதான் முதல் முறையாக சந்திக்கிறோம். என்னுடைய எழுத்துதான் தனக்கு உத்வேகம் தந்து வாழ்க்கையை வாழ வைத்தது என்று அவர் கூறியுள்ளார்.
விருதுகளே தேவையில்லை
நேரில் பார்க்காத ஒருவரை ஆதர்ஷ நாயகராக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வரும் இவரைப் போன்ற வாசகர்கள்தான் எனக்கு விருது. மற்றவையெல்லாம் என்னைப் பொறுத்தவரை குப்பைதான்.
ஒரு வாசகர் போதும்
எனக்கு இதுபோன்ற வாசகர்கள் போதும்.. தொடர்ந்து எழுத அது போதும். நான் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி இருக்கும். இத்தனை கதைகளையும் நானா எழுதினேன் என்று கூட எனக்கு மலைப்பு ஏற்படும். இந்த சாதனையைச் செய்ய வாசகர்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும்தான் கராணம். அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை என்றார் ராஜேஷ்குமார்.
மலர்க் கிரீடம்
ராஜேஷ் குமாரின் வாசகர்களால் நடந்த இந்த விழாவில் ராஜேஷ் குமாருக்கும், அவரது மனைவி தனலட்சுமி ராஜேஷ் குமாருக்கும் மலர் மாலை அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில் பாக்கெட் நாவல் அசோகனும் கலந்து கொண்டார். அவரை எழுத்தாளர் ராஜேஷ் குமார் வெகுவாக பாராட்டிப் பேசினார்.