அழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்!
எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள்.. இன்று அனுசரிக்கப்படுகிறது
சென்னை: அழகியலையும், அறிவியலையும் குழைத்து.. தன் எழுத்தில் அள்ளித் தெளித்தவர்தான் சுஜாதா.. ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள் இன்று.. காலமெல்லாம் அசைபோடும் அளவுக்கு விட்டுச்சென்ற அவரது எழுத்துக்களை பற்றி நினைவுகூர்வதில் ஒன் இந்தியா தமிழ் பெருமிதம் கொள்கிறது!
அநேகமாக 70'களின் மத்தியில்தான் எழுத தொடங்கி இருப்பார்... ஆனால் இறக்கும் காலம் வரை எழுத்தில் மழுங்கல் வாசகர்களை திருப்திப்படுத்தி விட்டு போனவர் சுஜாதா!
மனைவி பெயரில்தான் கதைகளை எழுத ஆரம்பித்தார்.. மத்திய அரசு வேலையில் இருந்தவர்.. ஆனாலும் பேனாவுக்கு மை ஊற்றிக் கொண்டு இருந்ததே இவரது முழு மூச்சாக இருந்தது!
ஸ்ரீரங்கம்
பூர்வீகம் ஸ்ரீரங்கமாக இருந்தாலும் சென்னைதான் இவரை வாரி அணைத்து கொண்டது.. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதி உள்ளார்.. எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல முகங்களை கொண்டவர்.. அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவரது புத்தகங்கள், கதைகளுக்கு இன்னமும் கிராக்கி இருக்கவே செய்கிறது... தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுஜாதாவாகத்தான் இருக்க முடியும்.
பொற்காலம்
சரியாக சொல்வதானால், சுஜாதா வாசகர்களுக்கு அது ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.. பிரமிப்பும், ஆச்சரியமும்.. சிந்தனை திறனும். குறிப்பாக அவரது தேடல் உணர்வும் அபாரமானது.. எத்தனையோ எழுத்தாளர்களை அந்த எழுத்துக்குள் ஊக்கியாக இருந்தன. ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு என்பது நெருக்கமானது.. அதாவது அந்தரங்கமானது... அதில் முதல் ரேங்கை பிடித்தது சுஜாதாதான்.
நவீனம்
அவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்துக்கள் நமக்காகவே எழுதியதைபோலவே இருக்கும்.. நம் வாழ்வியலை சார்ந்தும், அன்றாட நிகழ்வுகளை அப்பட்டமாக காட்டுவதாகவும் வெளிப்படுத்தும்.. இதுதான் சுஜாதா எழுத்தின் பிளஸ்! மனதில் தோன்றியதையும், கண்ணில் பட்டதையும் மட்டுமே உதிர்ப்பது அல்ல எழுத்து என்பதை புரிய வைத்தது சுஜாதா தான்.. இலக்கியம் என்ற வரையறைக்குள் அவர் இறுதிவரை சிக்காமல் அதே சமயம், நவீனத்தை தன் எழுத்தில் இழக்காமல்.. மொத்தத்தையும் வடிகட்டி சுத்தமான அறிவியல் சிந்தனையை புகுத்தினார் சுஜாதா என்கிற ரங்கராஜன்!!
கேரக்டர்கள்
இவரது கதைகளில் கணேஷ், வஸந்த் கேரக்டர்கள் ரொம்ப பிரபலம்.. 80'களின் இறுதியிலும் 90'களின் துவக்கத்திலும் இந்த பெயரை ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர் வாசகர்கள்.. காரணம் இவர்கள் இருவரும் கதாபாத்திரங்களாக இல்லாமல் ஒவ்வொரு வீட்டு பிள்ளைகளாகவே மாறிவிட்டனர்.. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை சுஜாதா எழுதவும், "கூடாது.. அவரை சாக விடக்கூடாது சார்... அவர் என்ன பிளட் குரூப்" என்று கேட்டு சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்த வரலாறும் உண்டு.
வசனகர்த்தா
ஆரம்பகட்டத்திலேயே இவரது கதைகள் சினிமாவாக எடுக்க ஆரம்பித்து விட்டனர்.. இது எப்படி இருக்கு, ப்ரியா என்று தொடங்கிய இவர் மிக குறுகிய காலத்தில், ஏராளமான ஸ்டார்களின் படங்களுக்கு வசனகர்த்தாவாக வேலை பார்த்துள்ளார்.. ஆனால் அத்தனையும் வணிகமதிப்புக்கு உகந்ததாகவே அமைந்தது இவரது வரிகள்.. முன்னணி இயக்குநர்களான சங்கர், மணிரத்னம் போன்றவர்களின் படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்திருக்கிறார்!
அறிவுஜீவிகள்
கமலும் சுஜாதாவும் நீண்ட கால நண்பர்கள்... இருவரும் பேச ஆரம்பித்தால் சுற்றி இருப்பவர்களுக்கு எதுவுமே புரியாதாம்.. அந்த அளவுக்கு இந்த அறிவுஜீவிகளின் சங்கமம் அடுத்தவர்களை கவனிக்க வைத்துள்ளது.. எந்திரன்' படத்தில் முதலில் கமல்தான் நடிப்பதாக இருந்தது.. ஆனால் ரஜினி நடிக்கிறார் என முடிவானதும், அதற்கேற்ப திருத்தங்களை செய்து தந்தார்.. ஒரே சமயத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுத முடியுமா.. அப்படித்தான் எழுதினார் சுஜாதா.. இது எத்தனை பேருக்கு சாத்தியம் என தெரியவில்லை!
நாய்க்குட்டி
சுஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் சுவாரஸ்யமானதே.. இவர் ஒரு நாய்க்குட்டி பிரியரும்கூட.. 2 நாய்க்குட்டிகளை உயிருக்குயிராக வளர்த்துள்ளார்.. அவைகளின் பெயர் மிமி, கிவி... ஒருமுறை அமெரிக்கா போகும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்றாராம்.. ஆனால், அந்த நாய்கள் வயதாகி இறந்த பிறகு திரும்பவும் பிராணிகளை வளர்ப்பதை தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.
மின்னணு வாக்கு மெஷின்
தேர்தலில் பயன்படும் மின்னணு வாக்கு மிஷின்தான் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, ‘வாஸ்விக்' விருதும் வழங்கப்பட்டது.. ஆனால் இது பற்றி குறைகளை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருந்தனர்.. எனினும், இறுதிவரை யார் சொன்ன புகாரும் நிரூபிக்கப்படவில்லை என்பதே சுஜாதாவுக்கு கிடைத்த அங்கீகாரமாக உள்ளது!
சுவாரஸ்யம்
விஞ்ஞானத்தைகூட காதலாக பார்த்தவர் சுஜாதா... விஞ்ஞானத்தை சுஜாதா அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் வேறு யாருமே எழுதியதில்லை... அதுவும் தமிழில்! தனிப்பட்ட கற்பனை.. எழுத்து நடையால் பல வாசகர்களை கவர்ந்த இந்த அசாத்திய கலைஞன்.. பரபரக்கும் எழுத்து நடை, அடுத்து என்ன ஆச்சோ என்று படக்கென அடுத்த பக்கத்தை திருப்ப வைக்கும் சுவாரஸ்யம்தான் பலமே!
பாக்கியவான்கள்
இறப்பதற்கு 4 மாசத்துக்கு முன்பு மூத்த மகனை கூப்பிட்டு "அம்மாவை பார்த்துக்கோ" என்று சுஜாதா சொல்லவும், அவர் ஏன் அப்படி சொன்னார் என்று யாருக்குமே அப்போது விளங்கவேயில்லை என்று "ஆனந்தி விகடன்" இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது... இப்போது நம்மிடம் சுஜாதா இல்லை.. ஆனால், ஒன்று மட்டும் சொல்ல தோன்றுகிறது.. சுஜாதாவின் எழுத்துக்களை வாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.. வாசிக்காதவர்கள்?!