போராட்டத்தின் போது ரயில்களுக்கு தவறான சிக்னல்.. மெட்ரோ நிர்வாகம் பகீர் புகார்.. மூவர் சஸ்பெண்ட்
சென்னை: நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தின் போது மெட்ரோ ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி, மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தின் போது சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விதிகளை மீறி சங்கம் அமைத்ததாகவும், பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டி மெட்ரோ ஊழியர்கள் 8 பேரை 2 நாட்களுக்கு முன் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை கண்டித்தும் மீண்டும் அவர்களை பணியில் சேர்க்க கோரியும் கடந்த திங்கட்கிழமை மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு நிலையங்களில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்
இந்நிலையில் இவ்விகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு தலை காதல்.. மறுத்த மாணவி.. வீட்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்.. குமரியில் வேன் டிரைவர் கைது
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையினை திட்டமிட்டு நிறுத்தியதாக மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ ரயில் ஊழியர்கள் மனோகரன், பிரேம்குமார், சிந்தியாரோஷன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தின் போது இவர்கள் மூவரும் மெட்ரோ தலைமைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அப்போது பாதைகளில் இயங்கி வந்த மெட்ரோ ரயில்களுக்கு தவறான மற்றும் ஆபத்தான சிக்னல்களை அளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.