தலைமை செயலகத்தில் யாகமா, பூஜையா.. தீயாய் பற்றியெரியும் சர்ச்சைகள்!
சென்னை: விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று, முதல்வர் உட்பட தலைமைச் செயலகத்தில் யாரும் இல்லாத அதிகாலை வேளையில் யாகத்தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நடந்தது யாகம் அல்ல பூஜை என்று மறுத்துள்ளார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
நடந்ததை பூஜை என்று கூறியவர் எதற்காக நடந்தது என்பதை வெளியில் இன்று வரை கூறவில்லை. நடந்தது பூஜை என்றாலும் நடத்தப்பட்டது அனைத்து மக்களுக்கும் சொந்தமான அரசின் தலைமைச் செயலகத்தில். நடத்தியவரும் ஒரு தனி மனிதர் அல்ல இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு துணை முதலைமைச்சர். இவைதான் இப்போது யாகத்தீயில் சர்ச்சைகளை பெருநெருப்பாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றுவது போல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஜெயித்து முதல்வராக வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதே இந்த யாகம் என்று யாகத்தீயை இன்னும் கொஞ்சம் மூட்டியிருக்கிறார். நடந்தது யாகம் என்றே கூறுபவர்கள் அது பிரம்ம முகூர்த்ததில் நடைபெற்றது என்றும், கண்திருஷ்டி கழிப்பு, வாஸ்து பரிகார பூஜையுடன், பிரித்யங்கரா தேவிக்கு நடத்தப்படும் மிளகாய் யாகமும் நடந்ததாய் கூறுகிறார்கள்.
அவசியம் என்ன
நடந்தது யாகம் அல்ல என்று கூறும் ஓ பன்னீர்செல்வம் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றாலும் யாகம் நடந்த அறை தற்போது சீரமைக்கப்பட்ட புதிய அறை ஆகவே அங்கு நடத்தப்பட்டது ஒரு சாதாரண பூஜையே என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் அந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது கடந்த ஆண்டு ஆயுதபூஜையின்போது. ஆக இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி மிக சாதாரணமாக எழுகிறது.
காரணிகள் இரண்டு
ஒரு யாகமோ அல்லது, ஓ பி எஸ் கூறுவது போல பூஜையோ என்றாலும், ஒன்று வேண்டுதலுக்காக இருக்க வேண்டும் அல்லது தனக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும்போது அதில் இருந்து தப்பிபதற்காக இருக்க வேண்டும் என்பதுதான் எதார்த்தம். அப்படி இருக்க ஓராண்டுக்கு முன்னரே சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்து விட்ட அறையில் இப்போது யாகமோ, பூஜையோ நடைபெறுகிறது என்றால் நிச்சயமாக மேற்சொன்ன இந்த இருகாரணங்களில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அப்படி பார்க்கும்போது ஓ.பி.எஸ் அவர்களுக்கு இப்போது இரண்டுமே இருப்பது தெளிவாகிறது.
அடுத்தடுத்து சிக்கல்கள்
ஒன்று இவர் தர்மயுத்தம் நடத்தியபோது சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இவரது அணியை சேர்ந்த எம் எல் ஏக்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இரண்டாவதாக கடந்த இரு வாரங்களாக இன்னொரு முக்கியப் பிரச்சனை அரசியலில் குறிப்பாக அதிமுகவினரை மையம் கொண்டு சுற்றி சுழன்று வருகிறது. அது கொடநாடு தொடர்பாக டெகல்கா.காம் -ன் முன்னாள் ஆசிரியர் மேத்யு வெளியிட்ட வீடியோவில் தமிழக அமைச்சர்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டன என்று கூறியுள்ளார், ஆக இப்படி இருவேறு பிரச்சனைகள் அதையும் தாண்டி ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியில் இருந்தவர் இப்போது அரசியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
யாருடைய விருப்பம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக சரளமாக புழங்கும் ஒரு பழமொழி - ஏட்டு மூத்து போலிஸ் ஆன கதை என்பார்கள் அதாவது ஒருவர் உயர்நிலையில் இருந்து கீழிறங்கி தாழ்ந்த நிலையை அடைவதை இவ்வாறு கூறுவார்கள். ஆக முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் இப்போது துணை முதலமைச்சராக இருப்பது அவருக்கோ அல்லது அவரை சார்ந்தவர்களுக்கோ ஒரு நெருடலாக கூட இருக்கலாம். ஆகவே ஸ்டாலின் கூறியதை போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வெல்ல இவராக விரும்பியோ அல்லது நெருக்கமானவர்களின் வற்புறுத்தலின் பேரிலோ கூட யாகமோ பூஜையோ நடைபெற்றிருக்கக் கூடும்.
ஜெ.வை விட தைரியம்
அரசு இடமான தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற யாகமோ பூஜையோ எதுவாக இருப்பினும் அது எதற்காக என்பதை அதை நடத்தியவர்கள் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான மக்களிடம் விளக்க வேண்டியது அவர்களின் கட்டாய கடமை. இதில் அடுத்த சர்ச்சை யாகமோ, பூஜையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்திய அரசியல் சாசனத்தை மீறி அனைத்து மக்களுக்கும் சொந்தமான ஒரு அரசு அலுவலகத்தில் இதை நடத்துவதற்கான உரிமையை யார் வழங்கியது? இப்படி நடத்துவதன் மூலம் அதிகாரம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த அரசு அலுவலகத்திலும் எதை வேண்டுமானாலும் செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது. எதெற்கெடுத்தாலும் ஆன்மீகத்தையும், ஜோதிடத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட தான் பதவி வகித்த நாட்களில் இப்படி ஒரு செயலை செய்தது இல்லை. அப்படி இருக்கும்போது ஓ பி எஸ் செய்திருக்கிறார் என்றால் ஜெயலலிதாவை விட மன தைரியம் மிக்கவர் என்றுதான் கூற வேண்டும்
இதுதான் வழியா
இந்தப் பிரச்சனையில் ஸ்டாலின் கூறும் குற்றசாற்றுகள் அரசியல் ஆதாயத்திற்காகத்தானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் ஓ பி எஸ் - ஈ பி எஸ்ஸை சிறைக்கு அனுப்பவே இப்படி யாகத்தை செய்தார் என்றும், இந்த யாகத்தில் பல்வேறு கோப்புகள் எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியதாக செய்திகள் வருகின்றன. கோப்புகளை எரிப்பதற்கோ அல்லது அவற்றை மறைக்க வேண்டும் என்றாலோ ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஓ பி எஸ் யாகம் நடத்தித்தான் அதை செய்ய வேண்டும் என்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அப்படி இருக்கும்போது அதற்கு யாகம் ஒன்றுதான் வழி என்பதில்லை. ஆனால் ஓ பி எஸ் கூறுவதையும் இதில் ஏற்பதற்கில்லை
முதல்வர் ஆகத்தான் யாகமா
முதல்வர் ஆகத்தான் யாகம் வளர்க்கப்பட்டது என்றால் எந்த எம் எல் ஏ - யும் யாகம் வளர்த்தால் முதல்வர் ஆகிவிட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் யார் உள்ளார்கள், முதலாமவர் வீழ்ச்சியுற்றால் அடுத்தபடியாக யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியென ஊரறிந்த ரகசியமே. இது எப்படியாக இருந்தாலும் இப்போது யாகம் வளர்த்ததாக எரியத் தொடங்கியிருக்கும் நெருப்பு அணைய சிலகாலம் பிடிக்கும் என்பதுதான் எதார்த்தம். இப்போதைய சூழலில் ஓ பி எஸ் இதை தவிர்த்திருக்கலாம்.