நோயாளியை தொட்டுப் பார்க்காமலே.. டாக்டர்களை மருந்து, மாத்திரை கொடுக்க வைத்த 2020
சென்னை: கொரோனா பரவல் காரணமாக, 2020மாவது ஆண்டு முழுவதும் மக்களின் கவனம் சுகாதாரத் துறை மீதுதான் அதிகமாக இருந்தது.
கொரோனா சிகிச்சை, கொரோனா தடுப்பூசி போன்றவற்றுக்காக மட்டுமல்ல, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீடியோ மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட ஒரே ஆண்டு 2020 மட்டுமாகத்தான் இருக்கும்.
கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சத்தால் பலர் மருத்துவமனைகளுக்கு வருவதையும் தவிர்த்தனர். அறுவை சிகிச்சைகளைக் கூட தள்ளிப் போட்டனர்.
நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் இடையிலான இந்த இடைவெளியைக் குறைக்க, தொலைத் தொடர்புத் துறை மேம்படுத்தப்பட்டது. டிஜிட்டல் சுகாதார சேவைகள் முன்பே இருந்தன, ஆனால் இது 2020 ஆம் ஆண்டில்தான் வளர்ச்சியடைந்தது.
டாக்டர் மோனிகா கோயல் இதுபற்றி கூறுகையில், ஒரு குழுவாக நாங்கள் ஆன்லைனில் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் வயது மூப்பு காரணமாக பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களுக்கு தீர்வுகளை கொடுக்க முடிந்தது என்றார்.
கொரோனா காலத்தில், பெரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டது. இது தனிநபர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்தன. மனநல பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்தது என்று சொல்லும் டாக்டர் தர்ஷி, "கவலை, மன சோர்வு கோளாறு, பீதி தாக்குதல், மரண பயம், தொற்றுநோய் பற்றிய பயம், விரக்தி, எரிச்சல், சோகமான மனநிலை, தூக்கமின்மை மற்றும் தினசரி செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பாதிப்பை அதிகரித்தன. இதற்கு ஆன்லைனில் வழிகாட்டினோம்" என்கிறார்.
ஆன்லைன் ஆலோசனை உதவியாக இருந்ததா?
"ஆன்லைன் ஆலோசனை காரணமாக, கவலை மற்றும் மருத்துவமனைக்கு வருவதற்கான பயம் ஆகியவை குறைத்தது. கொரோனா நோயாளிகளுக்கும், அவசர தேவை உள்ளவர்களுக்கும் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதற்கும் ஆன்லைன்ல ஆலோசனை உதவியது." என்று டாக்டர் கோயல் தெரிவிக்கிறார்.
உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,219,589ஆக உயர்வு.. இந்தியாவில் ஒரேநாளில் 342 பேர் தொற்றுக்கு பலி
நோயாளிக்கு கடுமையான நுரையீரல் பிரச்சினை அல்லது இதயம் தொடர்பான நோய் இருந்தால், அந்த நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆக மொத்தம், நோயாளியை தொட்டுப் பார்க்காமலே மாத்திரை எழுதி கொடுக்கும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டது, 2020ம் ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய மாற்றமாகும்.