ஸ்மார்ட் சிட்டி முதல் 35 ஏர்போர்ட் வரை.. மக்களை ஏமாற்றிய 2018ன் டாப் பொய்கள் என்ன தெரியுமா?
2018ல் அதிகம் வைரலான பொய்களின் தொகுப்பு.
சென்னை: 2018ல் அதிகம் வைரலான, அதிகம் பேசப்பட்ட, பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பொய்களின் தொகுப்பு ஆகும் இது.
2018ம் வருடம் பொய்களுக்கு மிக சிறப்பான வருடம் என்று கூறலாம். நிறைய நிறைய வதந்திகள் இந்த வருடம் வலம் வந்தது. வாட்ஸ் ஆப்பில் வந்த குழந்தை கடத்தல், நாய்கறி வதந்தி தொடங்கி டிசம்பரில் சென்னையில் மீண்டும் வெள்ளம் வர போகிறது என்பது வரை நிறைய வதந்திகள் வந்தது.
அந்த வதந்திகள் போல அல்லாமல், நமது ஆட்சியாளர்கள் வெளிப்படையாக பத்திரிக்கைகளில், செய்திகளில் சில பொய்களை கூறினார்கள். 2018ம் வருடம் மத்திய பாஜக அரசும், மத்திய அரசுக்கு நெருக்கமானவர்களும் சில விஷயங்களை தவறாக கூறினார்கள். என்னென்னவென்று பார்க்கலாம்.
35 ஏர்போட் கட்டினார்கள்
கடந்த நான்கு வருடத்தில் பாஜக அரசு மொத்தம் 35 விமான நிலையங்களை கட்டியதாக பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் சிக்கிமில் கூறினார். ஆனால் உண்மையாக இதில் சில விமான நிலையங்களுக்கு மட்டுமே முறையாக அடிக்கல் நாட்டப்பட்டது. சில விமான நிலையங்களுக்கு வெறும் திட்டம் போடப்பட்டதோடு இருக்கிறது. 35 திட்டம் போடப்பட்டு வெறும் 7 மட்டுமே 4 வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டது என்பதே உண்மையாகும். 28 இன்னும் கட்டப்படவில்லை.
உத்தர பிரதேச அரசு
அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 10 மாதத்தில் எல்லா உத்தர பிரதேச விவசாயிகளுக்கு நேரடி பண மாற்றம் மூலம் மொத்தம் 80,000 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறோம் என்று கூறினார். ஆனால் உண்மையில் இந்த வருடம் முழுக்கவே உத்தர பிரதேச பாஜக அரசு விவசாயிகளுக்காக செலவிட்ட மொத்த தொகையே வெறும் 14,450 கோடி ரூபாய் மட்டும்தான். ஆனால் அதை மறைத்துவிட்டு யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி பொய்
அதேபோல் இந்தியா முழுக்க பிரபலமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் நிறைய பொய்கள் சொல்லப்பட்டுள்ளது. 2015ல் இந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்த போது 2017க்குள் இதற்காக 2 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். 2018 தொடக்கத்தில் இதற்காக பணம் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறினார். ஆனால் தற்போதைய கணக்குப்படி இதுவரை இந்த திட்டத்தில் 48,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 21 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 1.8 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமித் ஷா
அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக ஆட்சிக்கு வந்த பின் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சட்டீஸ்கரில் கலவரம் குறைந்துள்ளது என்று கூறினார். ஆனால் அவர் கூறியதற்கு எதிராக மத்திய பாஜக ஆட்சிக்கு பின்தான் இங்கு கலவரம் அதிகரித்துள்ளது.
உதாரணமாக, குஜராத்தில் 1998 முதல் 2016 வரை 35,568 கலவரம் நடந்தது. இது முழுக்க பாஜக ஆட்சியில் இருந்த போது நடந்தது. மத்திய பிரதேசத்தில் 2003 முதல் 2016 வரை 32,050 கலவரம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகியின் 10 மாத ஆட்சியில் மட்டும் 195 கலவரம் நடந்துள்ளது. இது அனைத்தும் தேசிய குற்ற ஆவணப் தரவின் விவரம் ஆகும்.
கொலைகள்
அதேபோல் லின்சிங் எனப்படும் பசுக்களை காரணம் காட்டி மனிதர்களை கொல்வது, குழுவாக சேர்ந்து மனிதர்களை கொல்வதும் பாஜக ஆட்சிக்கு வந்த பின் குறைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவில் கடந்த நான்கு வருட ஆட்சியில்தான் 45 பேர் இது போன்ற லின்சிங் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர் (அதிகாரப்பூர்வமாக நடந்தது மட்டும்). இதற்கு முன் எந்த மத்திய அரசு ஆட்சியிலும் இவ்வளவு பெரிய தொடர் கொலைகள் நடக்கவில்லை.
சத்குரு கருத்து
பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் குண்டுகளே வெடிக்கவில்லை என்று சத்குரு குறிப்பிட்டார். ஆனால் மத்திய அரசு ஆவணங்களின்படி 2016ல் மட்டும் 400க்கும் அதிகமான குண்டுகள் வெடித்துள்ளது. கடந்த 4 வருடத்தில் எல்லா வருடமும் 200க்கும் அதிகமான குண்டுகள் இந்தியாவில் வெடித்துள்ளது.
மின்சாரம் வந்துவிட்டது
இந்த வருட தொடக்கத்தில் கர்நாடக தேர்தலை முன்னிட்டு, இந்தியா முழுக்க அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டதாக பாஜக பிரச்சாரம் செய்தது. பிரதமர் மோடியும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டது என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் கடந்த அக்டோபர் நிலவரத்தின்படி இன்னும் 8-13 சதவிகித கிராமங்கள் இந்தியாவில் மின்சாரம் இல்லாமல் இருக்கிறது.