இயர் எண்டர் 2020: தமிழகத்தில் கொட்டித்தீர்த்த பருவமழை... நிரம்பிய நீர் நிலைகள் - இயல்பை விட அதிகம்
2020ஆம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குக் பருவமழை இயல்பை விட 6 சதவிகிதம் பதிவாகியுள்ளது என்றும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 24% சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் இயல்பை விட அதிகமாகவே பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. 2020ஆம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் அணைகளும், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. 2021 ஆண்டு புத்தாண்டு மழையோடு பிறக்கப்போவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். இந்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும். பாபநாசம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். தென் மாவட்டத்தில் உள்ள பல அணைகளில் நீர் மட்டம் உயரும்.
வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும் நீடிக்கும். தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி பின்னர் வடஇந்தியா முழுவதும் பரவும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை அக்டோபர் 10ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
பருவமழை அதிகம்
இப்பருவ மழை காலத்தில் சராசரியாக 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 34 செ.மீ. ஆகும். அதைவிட 8 செ.மீ. அதிகம் பெய்துள்ளது. சென்னையில் வழக்கத்தைவிட ஒரு சதவிகிதம் மழை அதிகம் பெய்துள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை 44 செ.மீ. கிடைக்க வேண்டும். அதைவிட அதிகமாக பெய்துள்ளது.
அணைகள் நிரம்பின
இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளதால் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, கிருஷ்ணகிரி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், பேச்சிபாறை, பெருஞ்சாணி ஆகிய அணை களில் கணிசமான நீர் நிரம்பி வழிகின்றன.
மேட்டூர் அணை நீர்மட்டம்
இப்பருவ மழை காலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதி களில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை 100 அடிக்கு மேலே நீடிக்கிறது. அணையில் நீர் இருப்பு அதிகம் இருந்ததால் ஜூன் 12ஆம் தேதியே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழையால் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கணிப்பை விட அதிகம் கிடைத்த மழை
வழக்கமாக செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பருவமழை விலகிவிடும். நடப்பாண்டு அக்டோபர் 10ஆம் தேதி வரை தென்மேற்குப் பருவமழை நீடித்தது. வானிலை மையம் கணித்ததை விட இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது.1996ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் 30 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்தது. இது 36 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகம் பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அதிகம்
அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜனவரி 10ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் வழக்கமாக 44.9 செமீ மழை பதிவாக வேண்டும். இந்த ஆண்டு இதுவரைக்கும் 47.7 செமீ மழை பதிவாகியுள்ளது.
புயல்களால் கிடைத்த மழை
நிவர் புயல்,புரேவி புயல் என நடப்பு வடகிழக்குப் பருவமழை காலத்தில் இரண்டு புயல்களால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்தது. நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பியுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பியுள்ளன.
விடிய விடிய மழை
இதனிடையே சில நாட்கள் இடைவெளி விட்டிருந்த வடகிழக்குப் பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை , செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது.
கொட்டித்தீர்த்த மழை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ,தரங்கம்பாடி ,பூம்புகார் ,வைதீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்த நிலையில் திருச்சி மாநகர் பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. மதுரை, தூத்துக்குடி கோவில்பட்டி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல் தஞ்சை கும்பகோணம், தர்மபுரி, அரூர் பகுதிகளில் மழை பெய்தது.
பருவமழை நீடிக்கும்
இந்நிலையில் திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் விதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் அணைகளும், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றனர். 2021 ஆண்டு புத்தாண்டு மழையோடு பிறக்கப்போவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.