கடைசி ஆசையும் நிறைவேறாமல்.. வெளியில் சிரித்து.. உள்ளே அழுது மறைந்த வடிவேல் பாலாஜி.. கருணையற்ற 2020
மறக்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி
சென்னை: இந்த மரணம் எத்தனை இரக்கமற்றது என்பது ஒவ்வொருவரின் இழப்புக்கு பிறகுதான் தெரியவருகிறது. ஈவிரக்கமில்லாத எமன், நல்ல இதயங்களையும் அசாத்திய திறமைசாலிகளையும், மாபெரும் தலைவர்களையும்கூட விட்டுவைப்பதில்லை.. அந்த வகையில் நம்மை பாதித்தது மிகசிறந்த பண்பாளர், வடிவேல் பாலாஜியின் மரணமும் தான்.
காமெடி கலைஞர் வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் பிரபலம்.. காயம்பட்ட எத்தனையோ இதயத்துக்கு மருந்தானவர்.. பலரது மனபாரத்தை குறைத்தவர்.. கிளம்பும் டென்ஷனையும், எகிறும் பிரஷரையும் தூக்கி வீசி எறிய செய்தவர்.. இது பலருக்கும் கிடைத்திராத ஒரு அரிய வரப்பிரசாதம்.. ஒருவகையில் கொடுப்பினை என்றும் சொல்லலாம்.
பொதுவாக, இவர் மெதுவாக நிறுத்தி நிதானமாக பேசி யாருமே பார்த்ததில்லை.. பேசும்போதெல்லாம் ஒருவித ஸ்வீட் & ஸ்பிரிட் ரெண்டுமே இருக்கும்.. டக் டக்கென கவுண்ட்டர்கள் தருவது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல.. அரைச்ச மாவையே அரைக்கிற காமெடி இவரிடம் சுத்தமாக இருக்காது.
பிளஸ் பாயிண்ட்
கலக்கப்போவது யாரு சீசன் 4-ல் தான் வடிவேலு பாலாஜி அறிமுகமானார்.. அவர் அதில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது மாடுலேஷனும், பாடி லேங்குவேஜும் மக்களை ஈர்த்துவிட்டது.. நடிகர் வடிவேலுவை எத்தனையோ பேர் இமிடேட் செய்து மிமிக்ரி செய்திருந்தாலும், யாருமே செய்ய முடியாத கேரக்டர்களைகூட, வடிவேல் பாலாஜி துணிந்து எடுத்து பேசியதுதான் இவரது பிளஸ் பாயிண்ட்!
சோகம்
பொதுவாக, நகைச்சுவை நடிகர்களின் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் துயரமானதாகவே இருக்கும்.. இதற்கு பாலாஜியும் விதிவிலக்கல்ல.. வறுமையை தின்று தின்றுதான் பல வேளைகளில் பொழுதை கழித்துள்ளார்.. மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தாராம்.. என்னே ஒரு முரண்!! பிணவறைக்கும் நகைச்சுவைக்கும் என்ன சம்பந்தம்?
திறமை
பிறகுதான் படிப்படியாக சொந்த திறமையால் உயர்ந்துள்ளார். இப்போதுள்ள விஜய் டிவி காமெடி ஷோ நடிகர்கள் எல்லாம் தங்களுடைய காட் ஃபாதர் யார் என்று கேட்டால் வடிவேலு பாலாஜியைதான் சொல்வார்கள்.. பக்கவாதம் தாக்கி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. கொரோனா நேரத்தில் ஷூட்டிங் இல்லாததால், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்.. தன்னுடைய சிகிச்சைக்கு சரியான நேரத்தில் பணம் கட்ட முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே இதுதான்.
உயிரிழப்பு
உதவி என்று யாரிடமாவது கேட்டாரா? அல்லது கேட்டும் இவருக்கு உதவி செய்ய மறுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து, அங்கு தினமும் பணம் கட்ட முடியாமல், அதற்கு பிறகு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. ஆனால் அதற்குள் உயிர் போய்விட்டது.. 3 ஆஸ்பத்திரிகளுக்கு இவர் மாற்றப்படவும், உடல் மோசமாக நலிவடைந்துள்ளது. உடல் உறுப்புகள் செயல் இழந்து, அதன்பின் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
சிகிச்சை
கொரோனா காரணமாக இவருக்கு சிகிச்சை அளிக்க சரியாக பெட் கிடைக்கவில்லை என்றுகூட ஒரு பேச்சு எழுந்தது. இறுதியில் காப்பாற்றவே முடியவில்லை.. 2ம் சீசன் செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். Mr-Mrs நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து வித்தியாசமாக நடனம் ஆட ஆசையாக இருந்தாராம்.. அந்த கடைசி ஆசையும் நிறைவேறாமல் உயிரிழந்துவிட்டதாக நண்பர்கள் வருத்தப்பட்டு சொல்லியபடியே இருந்தனர்.
பணம்
எத்தனையோ சமூக பணிகளில் சத்தமில்லாமல் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வந்துள்ளார் வடிவேல் பாலாஜி.. இது பலரும் அறியாதது.. கையில் எவ்வளவு பணம் இருந்தாலும், உடனே உதவி என்று கேட்போருக்கு டக்கென எடுத்து தந்துவிடுவாராம்.. இந்த காலத்தில் யாரையுமே காயப்படுத்த காமெடி என்பது அதிலும் அரிதானது.. புரண்டு நெளியும் டபுள் மீனிங் டயலாக்குகளை இவர் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.. காமெடி என்ற பெயரில் தெரியாமல்கூட யார் மனசையும் நோகடிக்காத இந்த மனிதரை காலம் ஒருபோதும் மறக்காது!