நொறுங்கியது இதயம்.. நாட்டையே உலுக்கிய கர்ப்பிணி யானை.. அன்னாசி பழத்தில் வெடி.. 2020-ன் கொடூர மரணம்
கேரளா கர்ப்பிணி யானையின் மரணம் மறக்க முடியாத இழப்பாகும்
சென்னை: எத்தனையோ மனித இழப்புகளை இந்த வருடம் நாம் சந்தித்தாலும் மறக்க முடியாத ஒன்று கேரள கர்ப்பிணி யானையின் மரணம்.. ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிவிட்டது இந்த கர்ப்பிணி யானை!
நம் நாட்டை பொறுத்தவரை ஜீவகாருண்யம் மிக்க நாடு.. அட்டகாசமே செய்தாலும் சரி, உயிரையே பறித்தாலும் சரி, வெடி வைத்து கொல்வது என்பது கிடையாது.. முக்கியமாக சாப்பாட்டில் வெடியை வைத்து தருவது என்பது இதுவரை நடக்காத அதிர்ச்சி சம்பவம்.. நம் மக்கள் இவ்வளவு குரூரமாக யாரிடமும் நடந்து கொண்டதும் கிடையாது!!
ஆனால், கேரள யானை மரண விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு.. வயிற்று பசிக்காக சாப்பாடு தேடி அந்த கர்ப்பிணி யானை வந்துள்ளது.. அங்கே இருந்த அன்னாசி பழத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.. யானை அந்த பழத்தை சாப்பிட்டதும் வெடி வெடித்து விட்டது... அதன் வாயெல்லாம் ரத்தம் கொட்டி புண்ணாகி உள்ளது.. நாக்கு மற்றும் வாயின் உட்புறங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டன. ஏற்கனவே பசியால் துடித்த யானையால், தொடர்ந்து எதையுமே சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டது..
வலியால் துடித்தது
அளவுக்கு அதிகமான வலியால் காட்டுக்குள்ளும் திரும்பி போக முடியாமல் அல்லாடி இருக்கிறது. மேலும் வாயில் ஏற்பட்ட அந்த புண்ணில் ஈக்களும், மற்ற பூச்சிகளும் வந்து மொய்க்க ஆரம்பித்துவிட்டன.. அதனால் பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கி உள்ளது. அப்போதும் அதனால் தண்ணீரைகூட குடிக்க முடியவில்லை.. மூச்சுதிணறியபடியே இருந்திருக்கிறது.. அந்த ஆற்றிலேயே உயிரும் பிரிந்துவிட்டது.. போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோதுதான் அந்த யானை ஒரு கர்ப்பிணி என தெரியவந்திருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டரே கதறி அழுதுவிட்டார்.
போஸ்ட் மார்ட்டம்
"20 வருஷமாக 250-க்கும் மேற்பட்ட யானைகளை போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறேன்.. ஆனால் இப்பதான் முதல்முறையா, ஒரு யானையின் கரு என் கைகளில் இருப்பதை பார்த்து வார்த்தைகளின்றி நகர்ந்து சென்றேன்.. அதன் இதயத்தை நான் பார்த்தேன்.. அதில் அம்னோடிக் என்ற திரவத்தை கவனித்தேன். அப்போதுதான் அது கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தேன்" என்று கனத்த குரலில் சொல்கிறார்.
கொடூரம்
இந்த கொடூர காரியத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த நாடும் கொதித்து போனது.. குற்றவாளியை கண்டுபிடித்தால் 50 ஆயிரம் தரப்படும் என்று சன்மானம் அறிவிக்கப்பட்டது.. Change.org என்று சோஷியல் மீடியாவில் யானையின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது.
காட்டுப்பன்றிகள்
இறந்த யானைக்கு 15 வயது.. யானை உயிரிழந்த அதே வனபகுதியில்தான் காட்டுப்பன்றிகளும் இருந்திருக்கின்றன... அவைகள் பயிர்களை நாசம் செய்தும் வந்திருக்கின்றன.. இந்த காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக அடிக்கடி வெடிகள் இதற்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.. இது சட்டவிரோதம்தான் என்றாலும், காட்டுப் பன்றிகளுக்காக வைத்த வெடிமருந்துகளை யானை தெரியாமல், தவறுதலாக சாப்பிட்டுவிட்டதாக காரணம் சொல்லப்பட்டது.
வழக்கு
வழக்கும் பதியப்பட்டது.. விசாரணையும் நடந்தது.. மத விவகாரமாகவும் உருவெடுத்தது.. "கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்கு வேட்டையாடுதல் நடக்கிறது இதுவரையாரும் தண்டிக்கப்படவில்லை" என்று மேனகா காந்தி சொல்லவும், "மலப்புரம் முஸ்லிம் மக்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" என்று ஜவாஹிருல்லா மறுபுறம் காட்டமானார்.
திருப்பங்கள்
இப்படி பல்வேறு திருப்பங்களை இந்த வழக்கு தாங்கி வந்தது.. இறுதியில் வழக்கு தொடர்பாக சிலர் கைதானார்கள்.. வழக்கு விசாரணையின் போக்கு எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், இறந்துபோன கர்ப்பிணி யானையின் உருவத்தை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை.