இன்று மட்டும் 94 பேருக்கு பாதிப்பு.. சென்னையில் மொத்தமாக 768 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை: நேற்று ஒரு நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்றும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டமொத்தமாக சென்னையில் 768 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகள் கண்டெய்ன்மென்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உச்சக்கட்ட அச்சத்தில் மக்கள் உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் ஓரளவு நன்றாகவே வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகரை தவிர. இதற்கு காரணம் சென்னையில் உள்ள மக்கள் அடர்த்தி. இன்னொரு காரணம். ஊரடங்கை மதிக்காமல் தேவைக்கு அதிகமாக பலர் சாலைகளில் தேவையின்றி சுற்றி திரிந்தார்கள்.
தமிழகத்தின் மிகச்சிறிய நகரங்களில் கூட உழவர் சந்தைகள் ஊருக்குள் இருந்து உடனே வேறு நகரம் அல்லாத பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. சில பகுதிகளில் உழவர் சந்தைகள் மொத்தமாக மூடப்பட்டு வாகனங்கள் மூலம் மட்டும் விநியோகிக்கும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. சில்லறை வியாபாரிகள் தவிர பொதுமக்கள் யாரும் காய்கறி சந்தைகளுக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
நீங்க சென்னையா.. உங்க ஏரியா கண்டெய்ன்மென்ட் பகுதியில் வருதா.. மேப் பார்த்து தெரிஞ்சுக்கங்க
பல லட்சம் மக்கள்
அத்துடன் சாலைகளில் மக்கள் தேவையின்றி சுற்றுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் எடுக்கப்பட்டது. சென்னையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மற்ற நகரங்களை ஒப்பிடும் போது சென்னை நடவடிக்கை பலன் அளிக்கவில்லை. வெறும் 3 கிலோமீட்டர் தூரத்திற்குள் 10 லட்சத்திற்கும் அதிமான மக்கள் வாழும் பகுதிகள் சென்னையில் அதிகமாக உள்ளது.
சமூக விலகல் இல்லை
குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, ராயபுரம், ராயப்பேட்டை, திருவிக நகர், புதுப்பேட்டை, மண்ணடி, கோடம்பாக்கம் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிக அதிகம். மிகமிக குறுகிய தெருக்களில் கூட ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இதனால் மிக எளிதாக கொரோனா வைரஸ் அதிகரிப்பது வேகமாக அதிகரித்து வருகிறது. வெறும் மக்கள் அடர்த்தி மட்டும் சென்னையில் கொரோனா பரவ காரணம் அல்ல. சமூக விலகலை கடைபிடிக்காததும் முக்கிய காரணம் ஆகும்.
கண்டெய்ன்மென்ட் பகுதி
கடந்த ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து சென்னையில் கொரானா வைரஸ் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. மற்ற நகரங்கள் எல்லாம் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் செய்திகள் வெளியாகும் அதேநேரம் சென்னை மட்டும் இரட்டை இலக்கத்தில் பாதிப்பில் இருந்து சதம் அடிக்க தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று மட்டும் சென்னையின் பல இடங்கள் கண்டெய்ன்மென்ட் பகுதிகளாக மாறி உள்ளன.
மொத்தம் 767 பேருக்கு
இந்நிலையில் நேற்று 103 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் இன்று 94 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிகம். ஒட்டுமொத்தமாக இன்று தமிழகம் முழுவதும் 104 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சனிக்கிழமை அன்று முழு ஊரங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தில் திடீரென கூட்டம் கூட்டமாக சென்று சமூக விலகலை கடைபிடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதன் பாதிப்பு இன்னும் அடுத்த இரு வாரங்களில் தெரியும் என்பதால் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.