அத்தனை சிபாரிசு.. “எப்படி நீங்க வந்தீங்க?” இளைஞரணி புதிய நிர்வாகிகளை அழைத்து உதயநிதி கொடுத்த மெசேஜ்!
சென்னை : திமுக இளைஞரணி துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசி, அவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளைக் கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உயர்மட்டத் தலைவர்கள் பலரும், இந்தப் பதவிக்கு சிபாரிசு செய்தும் அதையெல்லாம் ஏற்காமல், நானே உங்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்துள்ளேன், என் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
உங்களிடம் நான் எதிர்பார்ப்பதெல்லாம் உழைப்பு உழைப்பு உழைப்புதான், மாவட்ட அமைப்பாளர்களாக நீங்கள் பணியாற்றியதை விட இந்தப் பொறுப்பில் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, இல்லந்தோறும் இளைஞரணி திட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவது பற்றிய ஆலோசனைகளையும் புதிய நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார் உதயநிதி.
'பல்டி’ அடிக்கும் தலைகள்.. முனுசாமி கோட்டையில் இறங்கிய தம்பிதுரை.. உச்சகட்ட குழப்பம்! என்ன நடக்குது?
கனிமொழி கொடுத்த ஃபைலை 'டிக்' அடித்த ஸ்டாலின்! முக்கிய பதவி பெற்ற ரத்னா! 'ஃப்ரீஹேண்ட்' மகளிரணி ஹேப்பி
புதிய பொறுப்பாளர்கள்
திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நியமனம் தொடர்பாக திமுக தலைமை கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, திமுகவின் இளைஞரணி செயலாளராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ். ஜோயல், ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் இளைஞரணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞரணியின் முக்கியத்துவம்
திமுகவைப் பொறுத்தவரை, கட்சியின் பிரிவுகளில் முதன்மையானதாக இளைஞரணியே இருக்கிறது. தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும் இளைஞரணி அமைப்பாளராகவே அரசியலில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர் என்பதால் இயல்பாகவே இளைஞரணிக்கு முக்கியத்துவம் அதிகம். 2019ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு இளைஞரணி இன்னும் கவனம் பெற்றது. திமுகவின் அதிகார மையங்களில் ஒருவராக விளங்கும் உதயநிதி பொறுப்பு வகிக்கும் அணி என்பதால், இளைஞர்கள் ஆர்வமாக இளைஞரணியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
8 பேர் புதியவர்கள்
இளைஞரணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் தூத்துக்குடி ஜோயல் மட்டுமே ஏற்கனவே அதே பொறுப்பில் இருந்தவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, தாயகம் கவி உள்ளிட்டோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 8 துணை செயலாளர்களும் புதிதாக இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். அதோடு, இந்த 8 பேருமே இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதயநிதி வீட்டில்
இளைஞரணியின் துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் அடுத்த நாளே சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அவர்களுடன் உதயநிதி ஸ்டாலினும் வந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பின்னர், அனைவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனது வீட்டில் இருபுறமும் உள்ள சோபாக்களில் 8 துணைச் செயலாளர்களையும் அமர வைத்த உதயநிதி, ஜோயலை மட்டும் தனக்கு அருகில் அமரவைத்துக் கொண்டுள்ளார்.
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
புதிதாக நியமிக்கப்பட்ட துணை செயலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துச் சொன்ன உதயநிதி, அவர்களுடன் மிகவும் கேசுவலாக பேசியதோடு, எதிர்கால பணிகள் பற்றியும் விளக்கியுள்ளார். நீங்க எல்லோருமே எனக்கு முன்பிருந்தே இளைஞரணியில் பணியாற்றி வந்தவர்கள் தான், எனக்கு எல்லோருமே சீனியர்கள்தான், இளைஞரணி எப்படி செயல்படுகிறது, செயல்பட வேண்டும் என்பது என்னை விட உங்களுக்கு நல்லாவே தெரியும், என்னையும் சேர்த்துக்கிட்டு இனிமேலும் நல்லா வொர்க் பண்ணுங்க என ஜாலியாக பேச்சை ஆரம்பித்துள்ளார்.
மேலிட சிபாரிசு
அதன்பிறகு, இந்தப் பொறுப்புக்கு எவ்வளவு போட்டி இருந்துச்சுனு உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். சீனியர் அமைச்சர்கள் தொடங்கி, நம்ம கட்சியில் முக்கியமான பொறுப்புகள்ல இருக்குற பலரும் இளைஞரணி மாநில பொறுப்புகளுக்காக ரெகமண்ட் பண்ணாங்க. அவங்க எல்லோருமே என்னோட மரியாதைக்கு உரியவங்க தான். ஆனாலும், யாருடைய சிபாரிசும் இல்லாம நானே செலக்ட் பண்ணவங்க தான் இங்க உட்கார்ந்திருக்கீங்க.
உழைப்பு உழைப்பு உழைப்பு
நீங்க இந்த இடத்துக்கு வந்ததுக்கு யார் சிபாரிசும் காரணமில்ல. உங்க உழைப்புதான் இந்த இடத்தில் உங்களை நிறுத்தி இருக்கு. இந்தப் பொறுப்பு தராததால, சீனியர்கள் சிலருக்கே என் மீது வருத்தம் இருக்கலாம், அதைப் பத்தி எல்லாம் நான் கவலைப்படப் போறதில்லை. இத்தனையையும் மீறி உங்களை கொண்டு வந்திருக்கேன்னா, உங்ககிட்ட நான் எதிர்பார்க்குறது எல்லாமே, உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான்.
தலைவர் எதிர்பார்க்குற டீம்
மாவட்ட அமைப்பாளர்களா நீங்க பணியாற்றும்போது வச்ச டார்கெட்டை விட அதிகமாகவே உறுப்பினர் சேர்க்கையை அச்சீவ் பண்ணிருக்கீங்க. மாநில பொறுப்புக்கு வந்த பிறகு இன்னும் உங்க பணிகள் வேகமெடுக்கணும். இப்ப உங்களுக்குக் கீழ இருக்குற மாவட்ட அமைப்பாளர்கள்கிட்ட வேலை வாங்கணும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தணும், தலைவர் நம்மகிட்ட நிறைய எதிர்பார்க்கிறார், அவர் எதிர்பார்க்குற பணிகளைச் செய்யுற ஒரு டீமை தான் நான் உருவாக்கிறேன்னு நினைக்கிறேன்.
அந்த வேலை கூடாது
ஏற்கனவே, இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையில 30 லட்சம் பேரை சேர்த்ததா தலைமைகிட்ட தெரிவிச்சோம். ஆனா, செக் பண்ணதுல இறந்துபோனவங்க, வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லாதவங்கனு லட்சக் கணக்குல இருந்துச்சு. அதையெல்லாம் மாவட்டங்களுக்கே திரும்ப அனுப்பி தூக்கிட்டு லிஸ்ட்டை பார்த்தா 25 லட்சம் தான் வந்தது. இந்த வேலை இனி நடக்கக்கூடாது. நம்ம அணியில சேர்ற ஒவ்வொரு உறுப்பினரும் நமக்கு அதை விட சில மடங்கு வோட்டா கன்வெர்ட் ஆகனும். சோ, ஒவ்வொருத்தரையும் ஒரிஜினலா சேர்க்கணும், அதுல கண்ணும் கருத்துமா இருக்கணும் என அட்வைஸ் செய்திருக்கிறார்.
அடுத்த திட்டம்
மேலும், திராவிட மாடல் பாசறையை 234 தொகுதிகள்லயும் நடத்தி முடிச்சிருக்கோம். அடுத்து இல்லந்தோறும் இளைஞரணி திட்டத்தை ஆரம்பிக்கிறோம். அதுல, ஒன்றிய அளவுல அதே மாதிரி கொள்கை, கட்சி வரலாறு, சாதனைகளை விளக்குற கூட்டங்களை நடத்தணும். ஒவ்வொருத்தரும், முழு ஒருங்கிணைப்போட செயல்படணும், நம்ம டீம்ல தான் முழு எனெர்ஜியோட, பணியாற்றுற ஆட்கள் இருக்கீங்க, எந்த பிரச்சனையும் தடையும் நமக்கு இல்ல, நாம இன்னும் எவ்வளவோ செய்யலாம் என நம்பிக்கையோடு பேசி அனைவருக்கும் வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.