அட இவுங்க எம்.எல்.ஏ.வா... எந்த தொகுதிப்பா... தடுமாறிய இளம் காவலர்கள்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ள பல இளம் காவலர்களுக்கு யார் எம்.எல்.ஏ., யார் பார்வையாளர்கள் என்பதை அடையாளம் காணுவது மிகவும் சிரமமாக இருக்கிறது.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனால் வழக்கத்தை விட சட்டப்பேரவை வளாகத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. புதிதாக பணியில் இணைந்த இளம் காவலர்கள் பெரும்பாலானோர் சீருடையிலும், சீருடையின்றி அடையாள அட்டையுடனும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சட்டப்பேரவை வளாகம் மற்றும் சட்டப்பேரவை கட்டிடத்திற்குள் செல்லும் நுழைவு வாயில்களில் மட்டும் சீனியர் காவலர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தான் தெரியும் யாரை விட வேண்டும் யாரை விடக்கூடாது என்று, அதனால் அவர்கள் முக்கிய நுழைவு வாயில்களை கவனித்துக்கொண்டனர்.
இதனிடையே நான்காம் கேட் பகுதி வழியாக நியமன எம்.எல்.ஏ.வான நான்சி(ஆங்கிலோ இந்தியன்) பட்ஜெட் உரை முடிந்து வெளியே வந்தார். அப்போது தனது கார் வருவதற்காக அவர் காத்திருந்தபோது, அங்கிருந்த இளம் காவலர்கள் ஒருவர், இங்க நிற்க கூடாது அந்தப்பக்கம் போங்க என அவரிடம் கூறினார். ஆனால் அது நியமன எம்.எல்.ஏ. நான்சி காதில் விழவில்லை. மீண்டும், அந்த காவலர் இந்தம்மா சொன்னால் கேட்க மாட்டீங்கிறாங்க என அருகில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் கூற, அவரோ இவங்க எம்.எல்.ஏ. தம்பி என அவருக்கு விளக்கினர்.
இப்படி பல சம்பவங்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள் நேற்று நடந்தன. இதனிடையே நியமன எம்.எல்.ஏ. என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கக் கூடும். அதாவது ஆங்கிலோ இந்தியன் கோட்டாபடி ஒருவர் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட வேண்டும் என்ற மரபு உள்ளது. அந்தவகையில் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டுமுறையும் ஜெயலலிதாவின் தேர்வாக இருந்தவர் இந்த நான்சி. கடந்த 9 ஆண்டுகளும் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருபவர். சட்டப்பேரவைக்குள் கூட அவர் வருவதும் தெரியாது, இருப்பதும் தெரியாது.