ராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்
போலீஸ்காரரின் விரலை வடமாநில இளைஞர் கடித்து துப்பிவிட்டார்
சென்னை: அரைநிர்வாண கோலத்தில் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்த ஒருவர் போலீஸ்காரரின் நடுவிரலை நச்சென்று கடித்து துப்பி விட்டார். இந்த சம்பவம் சென்னையின் தி.நகரில் நடந்துள்ளது.
தியாகராயநகர் தெற்கு போக் சாலையில் உள்ளது ராஜாத்தி அபார்ட்மெண்ட். இங்கு நேற்று விடிகாலை திடீரென ஒரு மர்ம நபர் நுழைந்தார். கையில் நிறைய கற்களை வைத்திருந்தார்.
அதை வைத்து, அந்த அப்பார்ட்மென்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை ஒவ்வொன்றாக உடைக்க ஆரம்பித்தார். இந்த சத்தம் கேட்டு, கேட்டின் முன்பக்கம் உட்கார்ந்திருந்த வாட்ச்மேன் ஓடி வந்து அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் கையில் வைத்திருந்த கற்களாலேயே கோவிந்த்தை தாக்க முயன்றார் அந்த மர்ம நபர். பிறகு, அப்பார்ட்மென்ட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் கற்களை வீசி நொறுக்க ஆரம்பித்தார்.
என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்!
இதனால் அந்த அப்பார்ட்மென்ட்டே அலறி கொண்டு வெளியே வந்தது. உடனடியாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு குடியிருப்புவாசிகள் போன் பண்ணி சொல்லவும், ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் சுந்தரமூர்த்தி விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்.
சுந்தர மூர்த்தியை பார்த்ததும், அந்த நபர் பாய்ந்து அவரது வலது கையை பிடித்து, நடுவிரலை நச்சென்று கடித்து விட்டார். இதில், சுந்தர மூர்த்தியின் பாதிவிரல் துண்டானது. உடனடியாக சுந்தரமூர்த்தியை ஆம்புலன்சில் ஏற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த மக்கள், அந்த நபரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சுந்தரமூர்த்தியின் விரலை கடித்து துப்பியவர் அசாம் மாநிலம் அமலாபுரியை சேர்ந்த பல்வாதூர் என்பது தெரியவந்தது.
மனைவி இறந்ததும் வேலை தேடி சென்னை வந்த அவர் வேலை கிடைக்காத விரக்தியில் சைக்கோ மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவருக்கு 40 வயதாகிறதாம்.. மனைவி இறந்துவிட்டாராம்.. அதனால் ஏதாவது வேலை தேடி பிழைக்கலாம் என்று சென்னை வந்துள்ளார். வந்த இடத்தில் என்ன ஆச்சோ தெரியவில்லை.. விரக்தியில் இப்படி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.