சாமியாரிடம் ஆசி வாங்க சென்ற இளைஞன்.. விஷவாயு தாக்கி பலி.. பிறந்த நாளில் சோகம்!
சென்னை: பிறந்த நாள் அதுவுமா சாமியார் கிட்ட ஆசீர்வாதம் வாங்க சென்ற இளைஞர், கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருநின்றவூர் அடுத்துள்ளது பேரத்தூர் மாந்திப்பை என்ற பகுதி. இங்கு வசித்து வரும் முனுசாமி என்பவரின் மகன் சம்பத்குமார். இவருக்கு 24 வயது.
எம்பிஏ படித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால், அடிக்கடி கோயிலுக்கு செல்வார். அப்போது, திருநின்றவூர், ஓம் சக்தி நகரில் வசித்து வரும் சந்தானம் குருஜி என்ற சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கஞ்சா ராணி சசிகலா.. விரட்டி பிடித்து ஆட்டோவை மடக்கிய போலீஸ்.. 46 கிலோ கஞ்சா பறிமுதல்!
இந்நிலையில், சம்பத்குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். அதனால், சாமியார் வீட்டுக்கு சென்று ஆசீர்வாதம் வாங்கலாம் என்று நினைத்து தனது நண்பன் நரேந்திரனை அழைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது சாமியார், தன் வீட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது, பலமுறை சொல்லியும் யாருமே அதை சரி செய்ய வரவில்லை, அதனால் அடைப்பை சரி செய்ய வேண்டும் என்று நரேந்திரனிடம் சொன்னதாக தெரிகிறது.
இதனால், சாமியாருக்கு உதவி செய்யலாம் என்று நினைத்து, நரேந்திரனும் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்தார். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் நரேந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து பதறிய சம்பத்குமார், நண்பன் நரேந்திரனை காப்பாற்ற கழிவுநீர் தொட்டியில் இறங்கினார்.
ஆனால் அவரையும் விஷவாயு தாக்கியதில், மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயங்கி விழுந்த நரேந்திரனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளுக்கு சாமியாரிடம் ஆசி வாங்க சென்ற சம்பத்குமார் சாமியார் வீட்டு கழிவுநீர் தொட்டியில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.