16 வயசு சிறுவனுடன் 23 வயது நர்ஸ் காதல்.. ஓடிபோய் குடித்தனம்.. கையில் குழந்தை.. டிக்டாக் விபரீதம்
16 வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: டிக் டாக் வீடியோ மூலம் 16 வயசு பையனுடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பையனை கடத்தி சென்று கல்யாணமும் செய்து கொண்டு, ஒரு பிள்ளையையும் பெற்றிருக்கிறார் நர்ஸ் ஒருவர். இப்போது அந்த பெண் போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேனியை சேர்ந்த ஒரு சிறுவன் சென்னை கிண்டியில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளான். வயசு 16. இவனது அப்பா துபாயில் இறால் தொழில் செய்து வருகிறார்.
சின்ன வயசு பையன் என்பதால், டிக் டாக் ஆப் மீது அதிக மோகம். அதனால் நிறைய டிக் டாக் வீடியோவை பதிவிட்டு வந்திருக்கிறான். அதனால் இவனுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.
மாயம்
அப்போதுதான் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நர்ஸ் பழக்கமாகி உள்ளார். சிறுவனை விட 7 வயசு மூத்தவர். டிக்டாக்கில் டபுள் விண்டோவில் டூயட் பாடுவது, லவ் டயலாக் பேசுவது என்று ஆரம்பித்தது பழக்கம். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாசம் பையனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் கிண்டி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசாரோ, இது சம்பந்தமான துரித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
மனு தாக்கல்
அதனால் சிறுவனின் தந்தை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கு பிறகு, விரைவில் சிறுவனை கண்டுபிடிக்கிறோம் என்று கோர்ட்டில் டைம் வாங்கியது. ஆனால் அப்போதும் போலீஸ் தரப்பில் சுணக்கம் காட்ட, கோபமடைந்த சிறுவனின் தந்தை 4 முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை கடுமையாக நீதிபதி கண்டிக்கவும்தான், போலீஸ் முழு வீச்சில் இறங்கியது.
40 நாள் குழந்தை
சிறுவனின் செல்போனை ட்ரேஸ் செய்ததில், திருப்பூர் அருகே ஊத்துக்குழி என்ற இடத்தில் சிக்னல் கிடைத்தது. இதைவைத்து போலீஸார் அடுத்தடுத்த விசாரணையில் இறங்கியபோதுதான் நர்ஸ் விவகாரம் தெரியவந்தது. அந்த பெண் கையில் 40 நாள் குழந்தை இருப்பதை கண்டு ஷாக் ஆனார்கள்.
கல்யாணம்
சிறுவனை கடத்தியது குறித்து கேட்டதற்கு, "எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அதனால பிடிக்காம சென்னைக்கு ஓடிவந்துட்டேன். அப்போதான் டிக்டாக்கில் பழக்கமானோம். கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு பிறந்த குழந்தை இதுதான்" என்று சொல்லி குழந்தையை எடுத்து காட்டி உள்ளார்.
காப்பகம்
பின்னர் இருவரையும் போலீசார் ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 18 வயது பூர்த்தி அடையாதவனை கல்யாணம் செய்து கொண்டதால், பெண்ணை ஆட்கடத்தல், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆனால் கைக்குழந்தையின் நலன் கருதி தாயுடன் காப்பகத்தில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் பாதுகாப்புக்காக 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யவும், சம்பந்தப்பட்ட சிறுவன் காப்பகத்துக்கும் அனுப்பி கோர்ட் உத்தரவிட்டது.