ஷேர் ஆட்டோவில்.. பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பின்னால் உட்கார்ந்திருந்த 2 இளைஞர்கள் செய்த காரியம்.. ஷாக்
ஷேர் ஆட்டோவில் பெண்ணின் தலைமுடியை இளைஞர்கள் கத்தரித்து உள்ளனர்
சென்னை: ஷேர் ஆட்டோவில் நம்பி போக முடியாது போல. பெண்ணின் பின்னால் உட்கார்ந்திருந்த 2 பேர் அவரது தலைமுடியை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷேர் ஆட்டோக்களில் செல்வோருக்கு குறிப்பாக பெண்களுக்கு பல பிரச்சினைகள் வருவதாக ரொம்ப காலமாகவே பெரிய புகார் லிஸ்ட்டே உள்ளது. இந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான பிரச்சினை வந்துள்ளது.
நெற்குன்றத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஷேர் ஆட்டோவில் அமைந்தகரை நோக்கி பயணித்தார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த இரண்டு பேரின் செயல்பாடுகளால் அவருக்கு சந்தேகம் வந்தது. தனது தலைமுடியை அவர்கள் என்னவோ செய்கிறார்கள் என்று அவருக்கு உறுத்தியது.
அலறினார்
டக்கென திரும்பிப் பார்த்த அவருக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆமாம், அவரது தலைமுடி வெட்டப்பட்ட நிலையில் அலங்கோலமாக காணப்பட்டது. இதைப் பார்த்து அப்பெண் அலறினார். ஆட்டோவில் இருந்தவர்கள் என்னமோ ஏதோ என்று பயந்து போயினர். என்னம்மா ஆச்சு என்று அந்தப் பெண்ணிடம் கேட்டபோது வெட்டப்பட்ட தலைமுடியை அவர் தூக்கிக் காட்டினார்.
அதிர்ச்சி
அதைப் பார்த்து இது என்ன கொடுமை என்று அனைவரும் ஜெர்க் ஆகினார்கள். பின்னர் அந்தப் பெண்ணுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டு வாலிபர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். பையை சோதனையிட்டபோது அதில் வெட்டப்பட்ட பெண்ணின் தலைமுடி இருந்ததைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி கூடியது.
செய்வினையா?
வழக்கமாக, செய்வினை வைப்பவர்கள்தான் தலைமுடியை சேகரிப்பார்கள் என்று சொல்வார்கள். எனவே இவர்கள் மந்திரவாதி கூட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது. உடனடியாக போலீஸாரிடம் இவர்களை ஒப்படைத்தனர். போலீஸார் விசாரித்தபோது சும்மாதான் வெட்டியதாக இருவரும் கூறினர்.
எச்சரிக்கை
இதையடுத்து அந்த இருவரின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பெண் புகார் கொடுக்க விரும்பவில்லை என்பதால் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர் அந்த இருவரையும் போலீஸார் விடுவித்தனர். அந்த இரு ஆண்களில் ஒருவர் வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறாராம்.
பெண்கள் என்ன மாதிரியான பிரச்சினைகளையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கு பாருங்க!!