மகள் உடம்பெல்லாம் காயம்.. கொன்று விட்டார்கள்.. போலீஸில் கதறிய தந்தை
வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
சென்னை: "என் மகள் உடம்பெல்லாம் காயங்கள் இருக்கு.. அவள் சாவிலும் மர்மம் உள்ளது" என்று பெண்ணின் தகப்பன் போலீசில் புகார் செய்துள்ளார்.
காசிமேட்டை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் தனது மகள் ஜெயஸ்ரீயை பார்த்தசாரதி என்கிற சரவணனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தார். 2016-ல் இந்த கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை சரவணன் ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கிறார்.
கல்யாணம் ஆனதிலிருந்தே வரதட்சணை பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது. இதனால் ஜெயஸ்ரீ மாமியார் வீட்டில் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக கூறுகிறார்கள். சென்ற வருடம் ஜெயஸ்ரீக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து உடனே இறந்தும் விட்டது.
தனிக்குடித்தனம்
ஒரு பக்கம் வரதட்சணை கொடுமை, இன்னொரு பக்கம் பிள்ளை பிறந்து இறந்தது என ஜெயஸ்ரீ கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அம்மா வீட்டுக்கு ஜெயஸ்ரீ கிளம்பி வந்துவிட்டார். ஆனாலும் பெற்றோர் அவருக்கு புத்தி சொல்லி, தனிக்குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
பிரச்சனைகள் இருக்கு
இந்த நிலையில், ஜெயஸ்ரீக்கு 13 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனாலும் வரதட்சணை தகராறு வலுத்து கொண்டே வந்தது. ஜெயஸ்ரீ தன் அப்பாவிடம் போனில் அழுதார். அதனால் மனம் நொந்த அப்பா, ஜெயஸ்ரீயை நேரில் பார்த்து, தன்னுடன் வந்துவிடுமாறு கூப்பிட்டார். "எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு. அதை முடிச்சிட்டு நானே வர்றேன்" என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார் ஜெயஸ்ரீ.
கதவை திறக்கவில்லை
மகள் இப்படி சொல்லிவிட்டாலும் அப்பாவுக்கு மனசே கேட்கவில்லை. அதனால் போனில் பேச நினைத்து மகளை அழைத்தார். ஜெயஸ்ரீ செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. அதனால் மாப்பிள்ளைக்கு போன் செய்தார் ஜெயஸ்ரீ அப்பா. அதற்கு மாப்பிள்ளை, "உங்க பொண்ணு கதவை பூட்டிக்கிட்டு திறக்கவே மாட்டேங்கிறாள், நேத்து தூக்க மாத்திரை நிறைய சாப்பிட்டு விட்டாள்" என்று சொல்லவும் அப்பா பதறி கொண்டு ஓடிவந்தார்.
ஜெயஸ்ரீ தற்கொலை
வீட்டிற்குள் வந்து பார்த்தால் மகள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். 13 நாள் பச்சிளம் சிசு பக்கத்திலேயே அழுதுகொண்டிருந்தது. உடனடியாக மகளை தூக்கிக் கொண்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயும், காப்பாற்ற முடியவில்லை. ஜெயஸ்ரீ இறந்துவிடவும் அவரது சொந்தக்காரர்கள் எல்லாம் காசிமேட்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடிவிட்டார்கள்.
தந்தை புகார்
ஜெயஸ்ரீ மரணத்திற்கு காரணம் வரதட்சணைதான் என முழக்கமிட்டனர். இதனிடையே, ஜெயஸ்ரீ அப்பாவும், "எனது மகளின் உடம்பில் காயங்கள் உள்ளன... மாமனார், மாமியார், புருஷன் மூவருமே அடித்து துன்புறுத்தி அவளை கொலையே செய்து விட்டனர் என்றும் தற்கொலை என்று டிராமா செய்வதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.