விரைவில் உங்களின் மாத சம்பளம் குறையப் போகிறது.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : புதிய ஊதிய கொள்கைகளின்படி தனியார் நிறுவனங்களை மொத்த ஊதியத்தில் 50% அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனியார் துறையில் வேலைபார்க்கும் ஊழியர்களின் மாத சம்பளம் குறைய போகிறது. ஆனால் அதேநேரம் உங்களின் பணம் பிஎப், கிராச்சுட்டி சேமிப்பாகவும் அதிகரிக்கும்.
அடுத்த நிதியாண்டில் இருந்து புதிய ஊதிய கொள்கைகளின்படி மாதாந்திர சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கான கிராசுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாத சம்பளம் வாங்குவோரின் அடிப்படை சம்பளம் மொத்த ஊதியத்தில் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலையில் அடிப்படை சம்பளம் குறைவாகவும் மற்ற இதர தொகைகள் அதிகமாகவும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கதிகலங்க வைக்கும் எலுரு.. விழிபிதுங்கும் டாக்டர்கள்.. மர்ம நோயால் கலங்கி போகும் ஆந்திர மக்கள்..!
சம்பளத்தில் தாக்கம்
மத்திய அரசு கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் புதிய ஊதியக் குறியீடு தொடர்பாக சட்டம் நிறைவேற்றியிருந்தது. அதன்படி, வருகிற 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது-
அடிப்படை ஊதியம்
இந்த விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையப்போகிறது.
மாற்ற வேண்டும்
புதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 2021 ஏப்ரல் முதல் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருப்பது கட்டாயம் ஆகும். எனவே ஏப்ரலுக்கு பிறகு ஊதிய கட்டமைப்பில் பெரிய மாற்றம் வரும்
அடிப்படை சம்பளம்
புதிய விதியின் கீழ் உங்களுக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டிய கிராச்சுட்டியின் அளவு அதிகரிக்கும். தற்போது அடிப்படை சம்பளத்தின் படித்தான் கிராச்சுட்டி கணக்கிடப்படுகிறது என்பதால் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் உங்களின் அடிப்படை சம்பளம் உயர்வதால், நிறுவனங்கள் கிராச்சுட்டியை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் உங்களுக்கு தர வேண்டிய பிஎஃப் பங்களிப்பையும் அதிகரித்து தர வேண்டும்.. இப்படி செய்வதால், நீங்களும் பிஎப் தொகைக்கு அதிக பணம் கட்ட வேண்டும். இதனால் தான் நீங்கள் கைக்கு வாங்கும் (டேக் ஹோம் சேலரி) சம்பளம் குறைந்துவிடும்.
பெரிய தொகை
ஆனால் உங்கள் கைக்கு வரும் பணம் குறைந்தாலும் உங்களின் எதிர்காலத்திற்கான சேமிப்பாக அது உயரும். எனவே ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளம் குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் சேமிப்பாக உங்களுக்குப் பெரிய தொகை கிடைக்கும்.
20 சதவீதம் ஊதியம்
புதிய வரையறை ஊதியம் என்பது பல்வேறு விதிமுறைகளை எளிமைப்படுத்தும் முயற்சி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இது தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை நடத்தும் முறையையும் மாற்றும். தற்போது, பல தனியார் நிறுவனங்கள் மொத்த ஊதியத்தில் 20% வரை அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க விரும்புகிறார்கள்.
எவ்வளவு ஊதியம்
புதிய விதிகளுக்கு இணங்க, அனைத்து நிறுவனங்களும் அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் தங்கள் சம்பள கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். விதிகளின்படி, ஒரு மாதத்திற்கு ரூ .15,000 க்கு மேல் வாங்கும் ஊழியர்களுக்கு பி.எஃப் கட்டாயமில்லை. சம்பளம் ரூ .15,000 க்கு மேல் இருந்தால் பி.எஃப் பங்களிப்பு செய்வது கட்டாயம் ஆகும்.