என்ன வாழ்க்கைடா இது.. காசு இல்லைன்னா மதிப்பு இல்லை.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
பணம் இல்லாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: "என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க" என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் பகுதியை சேர்ந்தவர் மன்சூர். ராயபுரம் பகுதியில் ஒரு பக்கோடா கடையில் வேலை பார்த்து வந்தார். 2 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் வீட்டில் நிச்சயதார்த்தம் செய்து வைத்தார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கவலையுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நண்பர்களிடம் தன்னிடம் பணம் இல்லை என்றும், பணம் இல்லாததால் யாருமே தன்னை மதிப்பதில்லை என்றும் புலம்பி உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு போய் தூங்கியவர் காலை வெகுநேரம் ஆகியும் ரூமை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தார் அவரது ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மன்சூர், தனது அம்மாவின் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து நின்றனர்.
உடனடியாக இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மன்சூரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் மன்சூர் தற்கொலை செய்வதற்கு முன், தனது செல்போனில் "என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டுறாங்க, வாழ்க்கைக்கு குட்பை" என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.