நிக்கி கல்ராணி ஆடைகள் திருட்டு.. வீட்டுக்குள்ளேயே ஒரு வில்லன்! சிசிடிவியில் சிக்கியது யார் தெரியுமா?
நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கேமராவை திருடிய நபரை திருப்பூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை: நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கேமராவை திருடிய நபரை திருப்பூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஆடைகளும் கேமராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் சமீபத்தில் வெளியான ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் தங்கி வரும் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தான் ராயப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், என்பவரை சில மாதங்களுக்கு முன் நியமித்ததாகவும் கூறியுள்ளார்.
57 ஆண்டுகளாக திருட்டு....நவீன ’இந்தியன் தாத்தா’....சில்வர் சீனிவாசன் சுவாரஸ்ய கதை
கேமரா திருட்டு
தனது வீட்டில் வேலை பார்த்து வந்த தனுஷ் என்ற நபர் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் எனவும் குறிப்பாக தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கேமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
நிக்கி கல்ராணி மீது புகார்
இதனிடையே அதே அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி மீது செல்லதுரை என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் என்பவரை பொருட்களை திருடியதற்காக சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்றும், தனுஷின் பெற்றோர்கள் தன்னிடம் உதவி கேட்டு உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி தனுஷின் தாய் நாகவல்லி மற்றும் தந்தை இருவரும் விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்து தன் மகனை காணவில்லை என்ற புகாரை அண்ணாசாலை காவல்நிலையத்தில் அளித்தனர்.
திருப்பூரில் பிடிபட்ட திருடன்
இதனையடுத்து அண்ணாசாலை போலீசார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை பிடித்து விசாரித்தனர்.
வழக்கை வாபஸ் பெற முடிவு
விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டிலிருந்து திருடியதாகவும் கோயம்புத்தூரில் ஒரு கடையில் அதனை விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட தனுஷை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொருட்கள் திரும்ப கிடைத்ததை அடுத்து தனுஷ் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற நிக்கி கல்ராணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.