சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை நடுரோட்டில் இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயம் அடைந்த மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் பொன். பாக்கியராஜ்.இவருக்கு 19 வயதாகிறது.
இவர் ஒரு கல்லூரி மாணவி ஒருவரை 4 வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இவரிடம் நட்பாக பழகி வந்தாராம்.
கல்லூரி மாணவி
ஒரு கட்டத்தில் இவர் காதலை சொல்லிய நிலையில் காதலை ஏற்க கல்லூரி மாணவி மறுத்துவிட்டாராம். இந்நிலையில் அந்த கல்லூரி மாணவி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்துள்ளார்.
சரமாரிய வெட்டினார்
காதலிக்க மறத்ததால் ஆத்திரத்தில் இருந்த பாக்கியராஜ் அவரை நேற்று பின்தொடர்ந்து சென்றுள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அவரது இரு கைகளையும் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவியை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அதன்பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மாணவியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
4 வருட காதல்
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்கியராஜை கைது செய்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே தானும் கல்லூரி மாணவியும் 4 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தன்னுடன் பேசாமல் இருந்த காரணத்தால் வெட்டியதாகவும் கூறினார்.
நட்பு மட்டுமே
ஆனால் இந்த மாணவி மறுத்துள்ளார். தன்னை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், ஆனால், தான் அவரை காதலிக்கவில்லை என்றும் நட்பாக மட்டுமே பழகியதாவும் தெரிவித்துள்ளார்.