சுஜித் மீட்பு விவகாரம்.. சென்னையில் செல்போன் டவரில் ஏறிய இளைஞர் தற்கொலை மிரட்டல்.. பரபரப்பு
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் செல்போன் டவரில் ஏறிய இளைஞர், சுஜித்தை மீட்க அரசு முறையாக செயல்படவில்லை என்று கூறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வருகிறார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் எம்ஐடி மேம்பாலம் அருகே 100 மீட்டர் உயரம் உள்ள செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் கருப்பு கொடியுடன் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.
இதைபார்த்த வாகன ஓட்டிகள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் அந்த இளைஞர் ஹரிகரன் என்பதை விசாரித்து அவரது செல்போன் எண் மூலம் விசாரித்து தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் , போலீசாரிடம், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டிப்பதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து இளைஞர் ஹரிகரனை மீட்பது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. தற்போது போலீசார் இளைஞர் ஹரிகரனை பத்திரமாக கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.