பிறந்தநாள் கேக்கை பட்டாகத்தியால் கேக் வெட்டியவர் வழிப்பறி வழக்கில் கைது
சென்னை: பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியவர் வழிப்பறி வழக்கில் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு கனகராய தோட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (34). மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். வேலைக்கு செல்வதற்காக புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் பாலாஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாயை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பாலாஜி புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் டிமலஸ் சாலை பகுதிகளில் கத்தியுடன் மறைந்திருந்த 3 பேர் பிடிபட்டனா்.
விசாரணையில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அய்யப்பன் (24), புளியந்தோப்பை சேர்ந்த சாமுண்டிஸ்வரன் (23) மற்றும் சரத்குமார் (22) என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனா்.
இதில் அய்யப்பன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புளியந்தோப்பு 3வது தெருவில், தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அய்யப்பனை போலீசார் தேடி வந்த நிலையில் வழிப்பறி வழக்கில் சிக்கினார்.